Sunday, April 2, 2023

குரல் வளம் தரும் திக்குவாய் போக்கும் திருக்கோலக்கா திருத்தலம்சீர்காழிக்கு அருகில் உள்ள தலம்..இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சப்தபுரீஸ்வரர்,

குரல் வளம் தரும் திக்குவாய் போக்கும் திருக்கோலக்கா திருத்தலம்
சீர்காழிக்கு அருகில் உள்ள தலம்..இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சப்தபுரீஸ்வரர், ஸ்ரீ தாளபுரீஸ்வரர். இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஓசைகொடுத்த நாயகி

சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவத்தல யாத்திரையைத் தொடங்கினார். 

சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். 

தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். 

கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். 

ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை பெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள "பொற்றாளம்" கோயிலில் உள்ளது. 

சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது.

கோவில் அமைப்பு

மக்கள் வழக்கில் தாளமுடையார் கோவில் என்று அறியப்படும் கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. 

முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது.  திருக்குளமானது சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது. 

இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால் இறைவன் சந்நிதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்த இறைவன் தாளபுரீஸ்வரர் லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். 

இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர். 

மேற்குச் சுற்றில் முருகர் சந்நிதியை அடுத்து மகாலட்சுமி சந்நிதி உள்ளது. 

இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். மகாலட்சுமி இங்கு சிவபெருமானை தவம் செய்து அதன் பயனாக மகாவிஷ்னுவை திருமணம் செய்து கொண்டாள். 

திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது. 

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம். 

இறைவி ஓசைகொடுத்த நாயகியின் சந்நிதி ஒரு தனிக் கோவிலாக இறைவன் சந்நிதிக்கு இடது புறம் அமைந்துள்ளது. 

வெளிப் பிரகாரத்தின் வடக்குச் சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவியின் சந்நிதியை அடையலாம்.

கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது

சரிவர பேச்சு வராத பலரும் இங்கு வந்து வழிபட்டுத் தெளிவாகப் பேசும் திறனைப் பெறுகிறார்கள். 

அம்பிகைக்குத் தேன் அபிஷேகம் செய்து அந்தத் தேனை நாவில் எழுதிக்கொண்டால் நல்ல பேச்சு வரும் என்பது நம்பிக்கை. 

செவித்திறன் குறைந்தவர்களும் இங்கு வந்து வழிபட்டு நல்ல பலனைப் பெற்றிருக்கிறார்கள். 

திக்கித் திணறிப் பேசும் பல குழந்தைகளின் குறையைத் தீர்த்து அருள்செய்த நாயகி இவள். 

`நன்றாகப் பேசும் திறமையும், இசைநயத்துடன் பாடும் திறமையும் வேண்டுபவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து அருள்மிகு சப்தபுரீஸ்வரரையும் அருள்மிகு ஓசைநாயகியையும் வழிபட்டு, பேசும் திறனும் நன்றாகப் பாடும் திறனும் பெறலாம்’ என்பது தொன்றுதொட்டு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...