Wednesday, September 6, 2023

திருவெண்காடு, நன் மக்கட்பேறு அருளும் தலம், நவக்கிரக தலங்களுள் புதன் தலம்,

நன்மக்கட்பேறு அருளும் திருவெண்காடு  காவிரி வடகரைத் தலங்களுள் 11-வது தலமாக விளங்கும் திருவெண்காடு, திருவெண்காடு, நன் மக்கட்பேறு அருளும் தலம், நவக்கிரக தலங்களுள் புதன் தலம்,நன் மக்கட்பேறு அருளும் தலம், நவக்கிரக தலங்களுள் புதன் தலம், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்ய ருத்ரபாதம் உள்ள தலம் என்ற பல சிறப்புகளைப் பெற்றது.இன்று

காவிரி வடகரைத் தலங்களுள் 11-வது தலமாக விளங்கும் திருவெண்காடு, நன் மக்கட்பேறு அருளும் தலம், நவக்கிரக தலங்களுள் புதன் தலம், முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்ய ருத்ரபாதம் உள்ள தலம் என்ற பல சிறப்புகளைப் பெற்றது.

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் 2-ம், திருஞானசம்பந்தர் பதிகம் 3-ம், சுந்தரர் பதிகம் ஒன்றும் என 6 பதிகங்கள் இருக்கின்றன. தேவாரம் பாடிய மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும்.

எப்படிப் போவது?

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடு சிவஸ்தலம் இருக்கிறது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. மயிலாடுதுறையில் இருந்தும் திருவெண்காடு வர பேருந்து வசதிகள் உள்ளன.

ஆலய முகவரி

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்,
திருவெண்காடு,
திருவெண்காடு அஞ்சல்,
சீர்காழி வட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 114.

தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமமானதாகக் கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை - 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம், 5. மயிலாடுதுறை.

தலப்பெருமை

விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள பெண்ணாகரத்தில் வாழ்ந்து வந்த அச்சுத களப்பாளர் என்பவர், பலகாலமாகப் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். அவர் தனது மனைவியுடன் அவரது குருவான அருணந்தி சிவாச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டார். குருவும் அச்சுத களப்பாளரை திருமுறையில் கயிறு சார்த்திப் பார்த்து அதன்படி நடக்கக் கூறினார்.

இந்நாளில் நாம் நினைப்பது நடைபெறுமா என்று அறிந்துகொள்ள சீட்டு குலுக்கிப் போட்டு, அதிலிருந்து ஒரு சீட்டை எடுத்துப் பார்ப்போமே. அதுபோல், அந்நாளில் திருமுறை ஓலைச்சுவடிக் கட்டில் கயிறு சார்த்திப் பார்த்தபோது, திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துக்கான ‘கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்’ என்ற திருப்பதிகம் வந்தது. அதில் உள்ள 2-வது பாட்டில், ‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம்பெறுவர்; ஒன்றும் ஐயுறவேண்டாம்’ என்ற வரிகளின் பொருளை அறிந்து மகிழ்ந்தார்.

உடனே, திருவெண்காட்டுக்குத் தம் மனைவியோடு சென்று, முக்குளத்தில் மூழ்கி, இத்தல இறைவன் சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டு ஒரு ஆண் மகனைப் பெற்றார். அக்குழந்தைதான், பிற்காலத்தில் ஸ்ரீமெய்கண்டதேவர் என்ற சைவ சமய சந்தானக் குரவர்களில் ஒருவராகச் சிறப்புடன் விளங்கியவர்.

அதன்படி, திருவெண்காட்டில் உள்ள முக்குளமான சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியவற்றில் நீராடி, இத்தல இறைவனை வழிபட்டு புத்திர சந்தானம் அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். திருவெண்காடு சென்று முக்குளத்தில் மூழ்க இயலாதவர்களும், இத்தல இறைவனை வழிபட்டு திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகத்தை உள்ளன்புடன் ஓதி வந்தால், இந்த முக்குளம் மூழ்கிய பலனாகிய நன்மக்கட்பேறு, இறைவன் அருளால் கிடைக்கப்பெறுவர்.

திருஞானசம்பந்தர், இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகங்கள் ஒன்றின் 2-வது பாடல் இங்கு தரப்பட்டுள்ளது.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
 

இப்பாடலின் பொழிப்புரை

மூங்கில் போன்ற திரண்ட தோளை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து, அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி எழுந்து வழிபடுவோரை பேய்கள் அண்டாது. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மன விருப்பங்கள் ஈடேறுவதை இறைவன் அருளால் அவர்கள் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டாம்.

கோவில் அமைப்பு

சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோவில் உள்ளே நான்கு பிராகாரங்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்துக்குக் கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்கள் உண்டு. வெளிப் பிராகாரத்திலிருந்து உள்ளே செல்ல இரு கூடகோபுரங்கள் இருக்கின்றன. சூரியனும் சந்திரனும் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர். ஆதிசிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் திருவெண்காடு தலத்துக்கு உண்டு.

 

மூலவர் சுயம்பு வடிவானவர். இங்கும் சிதம்பரம் போன்றே நடராஜர் சபை, ஸ்படிக லிங்கம், ரகசியம் அமைந்துள்ளது. ஸ்படிக லிங்கத்துக்குத் தினமும் 4 முறை அபிஷேகமும், நடராஜருக்கு வருடத்துக்கு 6 முறையும் அபிஷேகம் நடைபெறுகின்றன.

இத்தலத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும், காளி சந்நிதியும் மிகவும் பிரசித்தி பெற்றவை. துர்க்கை அம்மனின் உருவச் சிற்பமும், காளிதேவியின் உருவச் சிற்பமும் மிகுந்த கலை அழகுடன் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதேபோல், இங்குள்ள நடராஜ மூர்த்தியும் மிகுந்த கலை அழகு கொண்டது. சிதம்பரத்தில் உள்ளதைப்போல் இங்கும் நடராஜர் சபைக்கு அருகில் மஹாவிஷ்ணுவின் சந்நிதி இருக்கிறது.

இங்குள்ள அகோரமூர்த்தி, இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு பெற்றவர். பிரம்மாவிடம் பெற்ற வரங்கள் காரணமாக, மருத்துவன் என்ற அசுரன், தேவர்களைத் துன்புறுத்தியதால் அவர்கள் திருவெண்காடு வந்து தங்கியிருந்தனர். அசுரன், திருவெண்காட்டுக்கு வந்து மேலும் தேவர்களுக்குத் துன்பத்தைத் தரவே, தேவர்களைக் காப்பாற்ற அசுரனுடன் ரிஷபதேவர் போரிட்டார். மருத்துவாசுரன், ரிஷபதேவர் மீது மாயச் சூலத்தை ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போனது.

இதையறிந்த இறைவன் சிவபெருமான் கோபமுற்று, அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோரமூர்த்தியைக் கண்டவுடன் சிவனிடம் அசுரன் சரணாகதி அடைந்தான். அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து மருத்துவாசுரனை அழித்த நாள், ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். அதன்காரணமாக, இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 10 மணிக்கு மேல் (இரண்டாம் கால முடிவில்), அகோரமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவெண்காடு செல்வோர், அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால், அன்றிரவு தங்கி, ஆலயத்தில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிபாட்டைத் தரிசிக்க வேண்டும்.

 

இவ்வரலாற்றையொட்டி, சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோரமூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.

சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதம் இருக்கிறது. இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலமரத்தின் அருகில் நமது முன்னோர்களுக்குத் திதி தர்ப்பணங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். திதி தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த தலங்களில், திருவெண்காடு தலமும் முக்கியமான ஒன்றாகும்.

ஆதிசிதம்பரம்

திருவெண்காடு தலம், ஆதிசிதம்பரம் என்று போற்றப்படுகிறது. நடராஜ சபை சிதம்பரத்தில் உள்ளதுபோல், செப்பறையில் அமைந்துள்ளது. உள்ளே இருக்கும் ஸ்படிக லிங்கத்துக்கும் சிதம்பரத்தில் நடப்பதுபோல் நாள்தோறும் பூஜை நடைபெறுகிறது. சிதம்பர ரகசியமும் இங்குள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம், காளி தாண்டவம், கெளரி தாண்டவம், முனி தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க தாண்டவம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம் ஆகிய ஒன்பது தாண்டவங்களை ஆடியுள்ளார்.

நவக்கிரக ஸ்தலம் (புதன்)

திருவெண்காடு, நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய தலமாகும். அம்பாள் பிரம்மவித்யா நாயகியின் கோவிலுக்கு இடது பக்கத்தில், தனி சந்நிதியில் புதன் பகவான், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புதனின் தந்தையான சந்திரனின் சந்நிதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளது. புதன் பகவானை வழிபட்டால், உடலில் உள்ள நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்குதல், கல்வி மேன்மை, நா வன்மை, செய்யும் தொழில் சிறப்பு ஆகிய நன்மைகள் உண்டாகும். இசைக்கு அதிபதியான புதனை இசைக் கலைஞர்களும், திரைப்படக் கலைஞர்களும் வழிபட்டு பயன்பெறுகின்றனர்.

63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டுநங்கை பிறந்த தலம் என்ற சிறப்பும் திருவெண்காட்டுக்கு உண்டு. இந்திரன், ஐராவதம், சுவேதகேது, சுவேதன், மகாவிஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளனர்

 

திருஞானசம்பந்தர் அருளிய முக்குள நீர் பெருமையைக் கூறும் பதிகம்
 

கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுயுறவேண்டா ஒன்றும்
வேயன தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே.

மண்ணொடுநீர் அனல்காலோடு ஆகாய மதியிரவி
எண்ணில்வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்றடர அஞ்சுவரே.

தண்மதியும் வெய் அரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதல் உமையோர் கூறு உகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

சக்கரமாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமேல் அசைத்தானும் அடைந்த ஐராவதம் பணிய
மிக்கதனுக்கு அருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே.

பண்மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்து அன்று அருள் செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்டு இசைமுரலும் வெண்காடே.

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்து உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே.

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீரு இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீதிலர் என்று உணருமினே.

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச்சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத்து இவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...