Monday, December 25, 2023

உலகத்தில் மிகப்பழமையான சிவன் கோவில்.. உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவிலின் வரலாறு.

ஆருத்ரா ஸ்பெஷல்

உத்திரகோசமங்கை நடராஜர்.
உலகத்தில் மிகப்பழமையான சிவன் கோவில்.. உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவிலின் வரலாறு.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் பழமையான சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.  
உலகிலேயே முதல் நடராசர் தோன்றிய ஊர், உலகின் உள்ள அனைத்து ரிசிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில் என பல்வேறு சிறப்புகளை இந்த இக்கோயில் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்..

இந்தக் கோவில்தான் உலகின் முதல் சிவன் கோவில் என்று கருதப்படுகிறது. இந்த கோயில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. 

இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது. 

இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகசுவர இலிங்கம் உருவாக்கிய ஆலயம்.

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற வாக்கியம் உருவான இடம். மரகத நடராசர் சிலை உள்ள ஆலயம். 
இப்படி பல அதிசயங்களையும், ஆச்சர்யங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.

இந்த கோவிலை பற்றிய சிறப்பு தகவல்கள் :

உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும். திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை அவர்களது தலைநகராக இருந்தது. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், 
இலந்திகைப் பள்ளி, பத்ரிகா சேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும். இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும். மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

இராமாயண காலத்துக்கு முந்தையது :

மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் இராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் இராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

இத்தலத்தில் வேதவியாசர், 
காக புயண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர். இத்தலத்து பஞ்சலோக நடராசர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

முருகனுக்கு யானை வாகனம் :

இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது. 

இராமேசுவரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், இராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்கூறிய கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம். இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம். சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆதிசைவர் வசமிருந்த தலம் :

ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே இராமநாதபுரம் அரசரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்று வரை ராமநாதபுர சமத்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம். உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும். இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.

பிரதோசத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோசங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும். இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.
ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூசை தொடர்ந்துசெய்தால் 
தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.

இராமேசுவரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம். டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்சி, உத்தரகோச மங்கையில் மரகதக்கல் நடராசர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றியடையவில்லை.

காகபுயண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர். இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராசர் சன்னதி சகசசுவரலிங்க சன்னதி நான்கும் தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடராசர் பச்சை மரகதக்கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் பழமையான கோவில் என்பதால் இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள். காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம் அன்னாபிசேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.

தினமும் இத்தலத்தில் 
காலை 5.30 மணிக்கு உசத் காலம்,
8 மணிக்கு கால சாந்தி, 
10 மணிக்கு உச்சிக் காலம், 
மாலை 5 மணிக்கு சாயரட்சை, 
இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூசைகள் நடத்தப்படுகிறது. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, 
மதியம் 12.30 மணிக்கு, 
மாலை 5.30 மணிக்கு அபிசேகம் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.

மரகதக்கல் நடராசர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர். இத்தலத்தில் உள்ள இராசகோபுரத்தில் சர்பேசுவரர் சிலை உள்ளது. 
உலகத்தின் பழமையான  கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது. நடராசர் இங்கு அறையில் ஆடிய பின்னர் தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

தொன்மையான இலந்தை மரம் :

இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம். இங்குள்ள மங்களநாதர் இலிங்க வடிவில் உள்ளார். தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம். உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகசுவரலிங்கம் இங்குள்ளது.

பரதநாட்டிய கலை அறிமுகம் :

உத்தர கோசமங்கை திருத்தலமானது இராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும். இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள் உயரமாகவும், 
உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.
 
சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். 

மிகப் பழமையான ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து சென்றால் மனநிறைவுடன் செல்லுவது நிச்சயமாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...