செப்பறையில் கூத்தாடும் அழகிய கூத்தர்
செப்பறை நடராஜர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் புராதனம் மிக்கது.
திருநெல்வேலிக்கு அருகே ராஜவல்லிபுரம் கிராமத்தில் அழகிய தாமிரபரணியின் வடகரையில் அழகிய கூத்தர் திருக்கோயிலில் இவர் அருள்பாலிக்கிறார்.
சிதம்பரத்தை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் சிதம்பரத்தில் நடராஜர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய விருப்பம் கொண்டு சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாயமுத்து ஸ்தபதியை நடராஜர் சிலை செய்யப் பணித்தான்.
அழகின் உருவாக விளங்கிய அந்த நடராஜர் சிலை தாமிரத்தில் இருந்தது. அதைப் போன்றதொரு சிலையைத் தங்கத்தில் செய்து பிரதிஷ்டை செய்ய விரும்பி, தாமிரத்திலான முதல் சிலையைப் பிரதிஷ்டை செய்யாமல் காலம் தாழ்த்தினான்.
இறைவனின் திருவிளையாடலால் இரண்டாவதாகச் செய்த சிலையும் தாமிரமாக மாறிவிட்டது.
இரவில் சிங்கவர்மனின் கனவில் தோன்றிய இறைவன், ‘உன் கண்களுக்கு மட்டுமே நான் தங்கமாகத் தெரிவேன். மற்றவர்கள் கண்களுக்கு நான் தாமிரமாகவே தெரிவேன்..’ என்று அறிவுறுத்த, இரண்டாவதாகச் செய்த சிலையைச் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, தனது கனவில் இறைவன் இட்ட உத்தரவுக்கிணங்க, முதலில் செய்த நடராஜர் சிலையைச் சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிடுகிறான் சிங்கவர்மன்.
சிற்பியின் கனவில் தோன்றிய இறைவன் அச்சிலையை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி செல்லுமாறு அறிவுறுத்த, நிறைவாக அச்சிலை செப்பறைத் திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
நெல்லையப்பர் என்றழைக்கப்படுகிற மூலவரான ‘வேண்ட வளர்ந்த நாதர்’ சுயம்புமூர்த்தியாக தனிச் சன்னதியில் இருக்கிறார்.
லிங்கத்தின் நடுவில் அம்பிகை வீற்றிருப்பது இத்திருத்தலச் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்கது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment