Thursday, February 1, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்புவனம் கம்பகரேஸ்வரர்

வனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பகோணம் அருகில் திருபுவனம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். 
இக்கோயில் கும்பகோணம் அருகே மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. பெரிய திருச்சுற்றுடன் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. கருவறையின் வெளியே திருச்சுற்றில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின் உள் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் தாராசுரம் கோயிலில் உள்ளதைப்போன்று வேலைப்பாடுகளுடன் உள்ளன.
சுவாமி :கம்பகரேஸ்வரர் (நடுக்கந்தீர்த்த பெருமான்)

அம்பாள் : அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி)

மூர்த்தி : கம்பகரேஸ்வரர், சரபேஸ்வரர்.

தீர்த்தம் : சரபர் தீர்த்தம்

தலவிருட்சம் : வில்வம் மரம்

புராண பெயர்: திருப்புவனேசுரம்

ஊர்: திருபுவனம்

மாவட்டம்: தஞ்சாவூர்

மாநிலம்: தமிழ்நாடு

பாடியவர்கள்: அருணகிரிநாதர் 

#அருணகிரிநாதர் அருளிய 
#திருபுவனம்_திருப்புகழ் : (திரிபுவனம்)

தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
     சத்திக் கச்சில தித்திக் கப்படும் ...... அன்புபேசித்

தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை
     தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன ...... தொண்டையூறல்

கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை
     கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி ...... கின்றதோதான்

கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு
     கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப ...... தம்பெறேனோ

முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித
     முத்தச் சித்ரத னத்துக் கிச்சித ...... அம்புராசி

முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட
     முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும ...... டங்கல்வீரா

அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்
     அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை ...... கொண்டநாதா

அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ
     னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் ...... தம்பிரானே.

__அருணகிரிநாதர்

#இறைவன் பெயர்:

மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருப்பெயர் ஸ்ரீகம்பகரேசுவரர். தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள். திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும். இத்தலத்து அம்பாளுக்கு ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி என்ற பெயர் வழங்குகின்றது.

இங்குள்ள சரபேஸ்வரர் சன்னதி மிகவும் சிறப்பு பெற்றதாகும். சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் உள்ளார்.
சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.இக்கோயிலின் விமான அமைப்பு மேற்கண்ட கோயில்களில் உள்ள விமானங்களைப் போலவே அமைந்துள்ளது.

வரலாறு:

பிரகலாதன், திருமால், தேவர்கள், மக்கள் முதலானவர்களுக்கு விளைந்த கம்பத்தினை(நடுக்கத்தை) நீக்கியருளியதால் இத்தல இறைவன் கம்பகரேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். இக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.

தலச்சிறப்பு : 

இது சரபேஸ்வரருக்குரிய சிறப்பு வாய்ந்த தலமாகும்.  கலைச் சிறப்புடைய சிற்பங்கள் இங்கு உள்ளன.  சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது.  சரப மூர்த்தி வடிவத்தினைக் கோயில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள், போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் சரபேஸ்வரர் வழிபாட்டினைத் துவங்கினார்கள். 

தல வரலாறு : 

முன்னொரு காலத்தில் இரணியன் என்ற அசுரன் தேவர், மனிதர், விலங்கு முதலிய யாவராலும், எத்தகைய ஆயுதத்தாலும், பகல், இரவு என்ற இரு வேளைகளிலும் சாகாத வரத்தைத் தவமியற்றிப் பெறுகிறான்.  மமதையின் உச்சத்தில் தானே கடவுள் என்று அறிவித்து மீறுவோரைக் கொல்கிறான்.  இவனது மைந்தன் ப்ரகலாதன் தீவிரத் திருமால் பக்தன்!

அகந்தையின் உச்சத்தில் தன்னைக் கடவுளாக ஏற்க மறுத்த மகனையே கொல்லப் பல்வேறு முயற்சிகள் செய்கிறான்.  பலிக்கவில்லை! ஆத்திரத்தின் உச்சத்தில் மகனிடம் “நீ வணங்கும் நாராயணன் எங்கிருக்கிறான்? அவனைக் காட்டு.  உன் கண்முன் அவனைக் கொன்று நானே கடவுள் என்று உனக்கு நிரூபிக்கிறேன்” என்கிறான்.  ப்ரகலாதன் நிதானமாக “நாராயணன் எங்கும் இருக்கிறான், தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்” என்றான்.

ஆத்திரத்தோடு அரக்கன் அருகிலிருந்த தூணைக் காட்டி “அவன் எங்கும் இருக்கும் தெய்வம் என்றால் இந்தத் தூணில் இருந்து வெளிவரட்டும்” என எட்டி உதைக்க, சிங்கத்தின் தலையும், மனித உடலும் கொண்ட உருவமாய் நரசிம்மர் தோன்றி இரணியன் குடலைக் கீறி அவனை அழிக்கிறார். அழித்த பின்பும் ஆத்திரம் தீரவில்லை.  அனைவரும் சிவனிடம் காப்பாற்றும்படி முறையிடுகின்றனர்.

எட்டுக் கால்கள், நான்கு கைகள், இரண்டு இறக்கைகள், கூர்மையான நகங்கள், பற்கள், யாளிமுகம் ஒருங்கிணைந்த தோற்றமாய் சரபேஸ்வரர் தோன்றுகிறார்.  பாதி உருவம் அகோரப் பறவை, மீதி உருவம் அகோர விலங்கு! சரபேஸ்வரரைக் கண்ட நரசிம்மருக்குக் கோபம் நீங்கிப் பயம் வந்தது.   சிவனைத் தாக்க விழைகிறார்.

அப்போது சிவனின் தீண்டலில் சினம் தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறார் திருமால்.   அனைவருக்கும் ஏற்பட்ட கம்பத்தினை (நடுக்கத்தினை) தீர்த்ததால் சிவன் கம்பகரேஸ்வரர் (நடுக்கம் தவிர்த்த பெருமான்) என்ற திருப்பெயர் பெறுகிறார்.  சரபப் பறவையாய்த் தோன்றியதால் சரபேஸ்வரர்! என பெயர் உருவானதாக கூறுகிறது புராணக் கதைகள்.

#புராண வரலாறு :

அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது

#தொன்மைச் சிறப்பு:

இவ்வாலயத்தில் ஆறு கல்வெட்டுகள் கி.பி. 1907-ம் தொல்லியல் அறிக்கையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. அதன்படி இவ்வாலயம் ஈழம், கொங்குநாடு, வடநாடு, சேரர், பாண்டியர், தெலுங்கர் பலரையும் வென்றதின் நினைவாக, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதை, கி.பி. 1178-ம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நடராஜன் சன்னிதி, முகமண்டபம் எழுப்பப்பட்ட தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் ஆசிரியரான ஸ்ரீகந்த சம்புவின் மகனான ஈஸ்வர சிவன், இந்தக் கோவிலை நிர்மாணித்ததைக் கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. இதுதவிர, ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனும் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை அறிய முடிகிறது.

#சரபேஸ்வரர் :

தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.

அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்கஆணை யிட்டார்.

வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். எட்டுக் கால்கள், சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேஸ்வரர் என்ற பெயரில் கோவில் கெண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேஸ்வரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சரபேஸ்வரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேஸ்வரர் தான்.

இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது.

எதிரிகளால் தொல்லைகளில் இருந்து விடுபடவும், பகைவர்களை அழிக்கவும் வரம் தரும் வள்ளலாக இவர் போற்றப்படுகின்றார்.

#ஆலய அமைப்பு :

கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம்.

ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும்.

இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.

அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார்.

சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.

பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம்நாள் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல், பன்னிரண்டாம் நாள் சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும். இது தவிர, ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரர் சிறப்பு பூஜை மற்றும் ஏனைய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...