Tuesday, March 12, 2024

செங்கல்பட்டு அருகே ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் கோயில்

செங்கல்பட்டு அருகே ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள முக்தீஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் கிராமம் ஜிஎஸ்டி சாலையின் மேற்கில் செங்கல்பட்டு பாலத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் முக்தீஸ்வரர் மற்றும் தேவி தர்மசம்வர்த்தினி அம்பாள், அறம் வளர்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன் கிழக்கு நோக்கிய சிவலிங்க வடிவில் இருக்கிறார். இந்த லிங்கத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஒரு மெல்லிய கோடு லிங்கத்தின் மேல் பகுதியை (பானம்) செங்குத்தாக இரண்டு சம பாகங்களாக பிரிக்கிறது. அத்தகைய லிங்கம் பார்ப்பதற்கு மிகவும் அரிதானது என்றும், இது அர்த்தநாரீஸ்வரர் (சிவன் & சக்தி சம பாகங்களில்) சிவபெருமானின் வடிவத்தைக் குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

காஞ்சியில் ஏகாலியர் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்பு தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து செயல்பட்டதால் இந்த பெயர் வந்தது. “”அடியார்களது ஆடைகளின் மாசு கழிப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசு கழியும்” என்ற தத்துவத்தை இவர் உணர்ந்தார். தங்கள் ஊருக்கு வரும் சிவனடியார்களின் துணிகளை வெளுத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது பெருமையை இறைவன் உலகறிய செய்ய விரும்பினார். ஒரு நாள் சிவன் கிழிந்த உடையை உடுத்தி கொண்டு விபூதி பூசிய உடலுடன் குளிரில் நடுங்கிக் கொண்டே திருக்குறிப்பு தொண்டரின் இல்லத்திற்கு வந்தார். அவரை வரவேற்று உபசரித்த திருக்குறிப்பு தொண்டர், சிவனடியாரின் அழுக்கடைந்த கந்தல் துணியையும், மெலிந்த உடலையும் கண்டு வருத்தமடைந்து, உடல் இளைத்திருக்க காரணம் கேட்டார். இறைவன் சிரித்தார். அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத திருக்குறிப்பு தொண்டர்,”” ஐயா! நான் சிவனடியார்களின் ஆடைகளை சுத்தம் செய்து கொடுத்து விட்டு தான், மற்றவர்களின் ஆடையை துவைப்பேன். எனவே தாங்கள் தங்களது உடையை கொடுத்தால் உடனே சுத்தம் செய்து கொடுத்து விடுகிறேன்,” என பணிவோடு கேட்டார். “”இந்த குளிரில் இருக்கும் ஒரு ஆடையையும் உன்னிடம் கொடுத்து விட்டால் என் பாடு திண்டாட்டமாகி விடுமே,” என்றார் சிவன். திருக்குறிப்பு தொண்டர்,””ஐயா! அப்படி சொல்லாதீர்கள். விரைவாக துணியைக் காய வைத்து தருகிறேன்,” என்றார். “”இன்று மாலை பொழுது சாய்வதற்குள் துணியை வெண்மையாக்கி என்னிடம் தந்து விட வேண்டும்,” என கூறி துணியையும் கொடுத்தார் சிவன். பின்பு வருணபகவானை அழைத்து புயலும், மழையு மாய் வீசச் சொன்னார். தொண்டர் கலங்கி விட்டார். மழை நின்றபாடில்லை. மாலையும் நெருங்கி விட்டது. சிவனடியாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதே என்று வருந்திய தொண்டர் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் வாழ்வதா என நினைத்து துவைக்கும் கல்லில் தலை மோதி உயிர் விட தயாரானார். அதற்கு மேலும் சோதிக்க விரும்பாத இறைவன் துவைக்கும் கல்லில் இருந்து தன் கை நீட்டி தொண்டரின் தலை மோதாமல் தடுத்தார். இதைக்கண்டு அதிசயித்தார் தொண்டர். அப்போது வானத்தில் பேரொளி பிறந்தது. இறைவன் அடியவரை நோக்கி,””உன் பெருமையை இந்த உலகுக்கு உணர்த்தவே நாம் இவ்வாறு செய்தோம். இனி கயிலை வந்து எம்முடன் இருப்பீராக” என கூறி மறைந்தார். திருக்குறிப்பு தொண்டரும் பகவானின் திருவடியை அடைந்தார். இந்த வரலாறு நடந்த திருத்தலம் தான் முக்தீஸவரர் திருக்கோயில். சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயிலில் சுதை வடிவில் இந்த வரலாறு காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...