அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் கோயில், பூவனூர்-613803, திருவாரூர் மாவட்டம்.
*மூலவர்:
சதுரங்க வல்லபநாதர், சதுரங்க வல்லபேசுவரர், புஷ்பவன நாதர்.
*தாயார்:
கற்பகவல்லி,
ராஜ ராஜேஸ்வரி.
*தல விருட்சம்:
பலா மரம்
*தீர்த்தம்:
க்ஷீரபுஷ்கரிணி.
* திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்றதலம்.
*இத்தலத்தில் சுகப்பிரம்மரிசி மலர்வனம் வைத்து வழிபட்டார்.
*நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனமாக இந்த ஊர் இருந்ததால் இதற்கு ‘புஷ்பவனம்’ என்ற பெயர் ஏற்பட்டு பிற்காலத்தில் அது பூவனூர் ஆனது. இக்கோயில் உற்சவருக்கு புஷ்பவனேஸ்வரர் என்பது திருநாமம்.
*சதுரங்கம் இந்திய தேசத்தில் இருந்து தோன்றிய விளையாட்டு என்பது உலகறிந்த உண்மை. ஆனால் அதன் பூர்விகம் தமிழகம் என்கிறது நம் ஆன்மிகம். அதற்கு ஆதாரமாகத் திகழ்கிறது பூவனூர் திருத்தலம்.
*வசுசேனன் என்னும் மன்னனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. மன்னனும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். அன்னை பார்வதி தேவியார், "உங்களை அனுதினமும் பூஜிக்கும் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?" என்று ஈசனிடம் கேட்டார். அதற்குச் சிவபெருமான், "இந்த ஜன்மத்தில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது விதி. அதனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக. உரிய நேரத்தில் யாம் வந்து உம்மைத் திருமணம் செய்துகொள்வோம்!" என்று அருள் வழங்கினார்.
ஒரு நாள் வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண் குழந்தையாக மாறியது. ‘இறைவனே அனுப்பிய குழந்தை’ என்றுணர்ந்து அதற்கு ‘ராஜராஜேஸ்வரி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனமாக வளர்ப்பதற்கென, சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டியையும் பூமிக்கு அனுப்பினார் இறைவன். குழந்தையின் வளர்ப்புத் தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை ராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த இளவரசி, குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள்.
அவள் திருமண வயதை எட்டியபோது, "என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்" என்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார் மன்னர். அனால் யாராலும் ராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை. இதனால் கவலையுற்ற மன்னர், ‘யாருமே அவளை வெல்லமுடியவில்லையே! தம் மகளுக்குத் திருமணமே முடியாமல் போய்விடுமோ?’ என்று சஞ்சலமடைந்தார். ‘இனி சிவபெருமானிடமே முறையிடுவோம்’ என்று எண்ணியவராக, குடும்பத்தோடு சிவாலயங்களை தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார். பல சிவாலயங்களைத் தரிசித்த பின்னர் திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரை தரிசித்து, குடும்பத்துடன் அந்த ஊரிலேயே தங்கினார் மன்னர்.
மறுநாள் காலையில், வயோதிகர் ஒருவர் மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டார். அரசன் சம்மதிக்க, ஆட்டம் தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத ராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் தோற்றுவிட்டாள்.
"இப்படி வயதில் முதிர்ந்த ஒருவருக்கு தன் இளம் மகளை எப்படித் திருமணம் செய்து கொடுப்பது?" என்று மன்னருக்கு பெருங்கவலை ஏற்பட்டது. மீண்டும் அவர் சிவனாரைத் தியானிக்க, அங்கே முதியவர் மறைந்து சாட்சாத் சிவபெருமானே தோன்றினார்.
சதுரங்க ஆட்டத்தில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
*இங்கு வந்து சதுரங்க வல்லப நாதரை வேண்டிக்கொண்டால் சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
*இரு அம்மன் சன்னதிகள்-
கோயிலின் இடது புறத்தில் "ராஜராஜேஸ்வரி அம்மன்" சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. அந்த சன்னதியை ஒட்டி அடுத்ததாக "கற்பகவல்லி அம்மன்" சன்னதி உள்ளது. இரு சன்னதிகளும் தனித்தனியாக கருவறை, விமானம் ஆகியவற்றோடு அமைந்துள்ளன.
*இங்குள்ள வடக்கு நோக்கிய சாமுண்டீசுவரி சன்னதி சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இச்சன்னதி, முன் மண்டபம், கருவறை விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி, மிகவும் சக்தி வாய்ந்தவள். சப்தமாதாக்களுள் ஒருவராக இருக்கும் சாமுண்டி, இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருப்பது சிறப்பு. மைசூருக்கு அடுத்தபடியாக, சாமுண்டீஸ்வரிக்கென தனிச் சன்னதி அமைந்திருப்பது பூவனூரில் மட்டும்தான்.
*ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் இருக்கும் ஒரு வைத்தியர், க்ஷீர புஷ்கரணியில் நீராடிவிட்டு வரும் எலிக்கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார். அவர்கள் சாமுண்டிக்கு அர்ச்சனை செய்தபின் வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கி சாப்பிடுவதன் மூலம் அவர்களுடைய உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக குணமாகிறது.
*கும்பகோணத்திலிருந்தும் திருவாரூரிலிருந்தும் பூவனூருக்குச் செல்லலாம். மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில், மன்னார்குடியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் நீடாமங்கலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம் .
No comments:
Post a Comment