செவ்வாய் கிழமையில் வினை தீர்க்கும் வேல் வழிபாடு..!
"சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை" என்றும் "வேலுண்டு வினையில்லை" என்றெல்லாம் கூறுவார்கள்!!
நம் வாழ்க்கையில் அனுதினமும் ஏதேனும் ஒரு பிரச்சனைகளையும், அதனால் மனக்கவலைகளையும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். இந்தப் பிரச்சனைகளும், கவலைகளும் தீர செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கினால் போதும்.
நம்முடைய வேண்டுதல்கள் உடனடியாக பலிக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற சிறப்பான பரிகாரங்கள் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையில் வீடு, பூஜையறை போன்றவற்றை சுத்தம் செய்து, முருகன் படத்திற்கு வாசனை மலர்களால் மாலை சாற்றி, அவருடைய வேல்-ஐ சுத்தம் செய்து அதனை வழிபடலாம்.
உங்களுடைய நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறாமல் உள்ளதா? இறைவனை நினைத்து இந்த வழிபாட்டை நீங்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள்... நிச்சயம் நல்ல பலனைப் பெற முடியும்.
அதுமட்டுமில்லாமல், முருகப்பெருமானை நினைத்து பக்தியோடு வணங்கி வந்தால், நம்முடைய நியாயமான ஆசைகளை அவர் நிறைவேற்றுவார்.
குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள், கடன் தொல்லைகள், நோய்கள் தீர, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, காதல் கைகூட மற்றும் திருமணத் தடை அகல இந்தப் பரிகாரத்தை 21 வாரங்கள் செய்து வந்தால், கண்டிப்பாக இறைவன் அருள் புரிவார்.
நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும், அவைகள் யாவும் நொடியில் நீங்கி, பகைவர்கள் ஒழிந்து, முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க...
வேல் பூஜையில் மந்திரத்தை எப்படி உச்சரிக்கலாம்? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்...
புதிய வேலை வழிபாட்டிற்கு பயன்படுத்தும் விதம்:
முதலில் ஒரு சிறிய அளவிலான வேல் வாங்க வேண்டும்.
இதனை நாம் நேரடியாக வாங்குவதை விட, நம்முடைய குரு அல்லது வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலமாக வாங்க வேண்டும். (இதனால் அவர்களின் ஆசீர்வாதத்துடன் இந்த வேலை நாம் பெறுகிறோம்.)
அந்த வேல் மீது மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
ஒரு செம்பு சொம்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தச் சொம்பை சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து, அதனுள் விபூதியை நிரப்ப வேண்டும்.
இப்பொழுது இந்த வேலை விபூதிக்குள் சொருக வேண்டும்.
அதன்பிறகு, பூக்களை வேல் மீது சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.
அதன் பின், உதிரி பூக்களை எடுத்து "ஓம் முருகா" என்று கூறி பூக்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
இவ்வாறு 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும்.
பின்னர், தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து, கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இப்படி உச்சரித்து வந்தால், வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்களும் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.
இதனை முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் செய்து வர, முருகனின் அருள் பரிபூரணமாக நமக்குக் கிடைக்கும்.
அந்தவகையில் முருகனுடைய வேல்-ஐ வைத்து, அதற்கு வழிபாடுகள் செய்து, கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்... எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் உடனே நீங்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம்:
எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
நவகிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
என்னுடைய தாபங்கள் தீர்ந்து விட அருள் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
பாவங்கள் என்னிடம் நெருங்காமல் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
என்னைச் சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
எனக்குப் பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகத்தை தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள்தோறும் சொல்லி வழிபட்டு வந்தால், வேலாயுதத்தின் சக்தியால், நம்மைச் சுற்றியுள்ள அத்தனை பிரச்சனைகளும் நீங்கி, நமக்கு நல்ல ஒரு பாதை பிறக்கும்.
வேலை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்:
காரிய தடைகள் விலகி, திருமணம் கைகூடும்.
குழந்தைப்பேறு கிடைக்கும்.
கல்வியில் மேன்மை, மனப் பயம் நீங்கி வலிமை உண்டாகும்.
வியாபாரத்தில் லாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மரண பயம் நீங்கி, நீண்ட ஆயுள் பெறலாம்.
சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும்.
கலைகளில் தேர்ச்சி, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும்.
"வெற்றிவேல், வீரவேல்" என முழங்கும் இடத்தில், வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும்!
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment