அம்பாள் கட்டியணைத்த அடையாளம்.. 5008 ருத்ராட்சங்களால் பந்தல்..!!
அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில்...!!
*இந்த கோயில் எங்கு உள்ளது?*
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?*
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலவர் ஆவார். இந்த லிங்கத்தில் அம்பாள் கட்டியணைத்ததற்கான அடையாளம் உள்ளது சிறப்பம்சமாகும்.
உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில், கண்ணாடி அறையில் 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தலில் காட்சியளிக்கிறார். இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம்.
இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்பது நம்பிக்கைஹ.
ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு எதிரே உள்ள பிரகாரத்தில் ஸ்படிக லிங்கமும், அதற்கு எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் உள்ளது.
இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.
இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
*வேறென்ன சிறப்பு?*
பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும்.
ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ர லிங்கம் மற்றும் அஷ்டோத்திர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது.
இத்தலமானது அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும்.
கோயில் முன் மண்டபத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்ட பெருமாள் சன்னதி உள்ளது.
இத்தல விநாயகர் விகடசக்ர விநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகர் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
*என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?*
பங்குனி உத்திரம் பெருவிழா 13 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் மற்றும் ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல், பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம் ஆகிய விஷேச நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
*எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?*
திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இது திருமணத்தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?*
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment