Thursday, August 21, 2025

திரிகோணமலை (திருகோணேஸ்வரம்) #கோணேஸ்வரர் (கோணை நாதர்) #மாதுமையாள் திருக்கோயில் வரலாறு:

#தென்_தட்சிண_கைலாயம் என்ற
இலங்கை நாட்டில் உள்ள
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றானதும் , 51 சக்தி பீடங்களில் ஒன்றான  #திரிகோணமலை (திருகோணேஸ்வரம்) 
#கோணேஸ்வரர் 
(கோணை நாதர்) 
#மாதுமையாள் திருக்கோயில் வரலாறு:

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்த்துகீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

மூலவர்:கோணேஸ்வரர்
அம்மன்:மாதுமையாள்
தல விருட்சம்:கல்லால மரம்
தீர்த்தம்:பாவநாசம்
ஊர்:திருகோணமலை
மாவட்டம்:இலங்கை
மாநிலம்:மற்றவை
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப் பதிகம்:

குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன் உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் சுற்றமும் ஆகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

_திருஞான சம்பந்தர்

தல வரலாறு:

இராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண கலாய புராணங் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில் இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது. இராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய காலத்துக்குப் பின் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது என்றும் ராஜாவளிய என்னும் புத்த சமய வரலாற்று நூல் கூறுகின்றது. 

ராவணன் தனது தாயாரின் சிவபூஜைக்காக தட்சிண கயிலாயமான திருகோணமலையைப் பெயர்த்ததாகவும் ஒரு செய்தி தட்சிண கயிலாயமான திருகோணமலையைப் பெயர்த்ததாகவும் ஒரு செய்தி தட்சிண கயிலாய புராணத்தில் உள்ளது. இதற்குச் சான்றாக ராவணன் வெட்டு என்ற மலைப்பிளவு இன்னும் இப்பகுதியில் காணப்படுகிறது. கடல் சீற்றத்திற்குப் பிறகு கோயில் அருகிலுள்ள சுவாமிலை எனப்படும் குன்றின் உச்சியில் கோயில் மீண்டும் அமைக்கப்பட்டது. கி.பீ 7 ஆம் நூற்றாண்டில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோயிலின் அழகினைக் கேள்விப்பட்ட திருஞான சம்பத்தர் ராமேஸ்வரத்தில் இருந்தபடியே ஞானக்கண் கொண்டு குற்றமில்லாதார் குறைகடல் சூழ்ந்த கோண மாலையமர்ந் தாரை…. என தேவாரப் பதிகத்தில் பாடியுள்ளார். அப்படி பெருமானும் போற்றிப் பாடியுள்ளார்.

டெம்பிள்ஸ் அஃப் தவுசண்ட் பிள்ளர்ஸ் என்றழைக்கப்பட்ட இக்கோயிலின் தூண்களையும் கற்களையும் பெயர்த்து எடுத்த பின்பே, கோயிலைத் தரைமட்டமாக்கினான். அத்தூண்களையும் கற்களையும் கொண்டு புகழ்பெற்ற பிரட்ரிக் கோட்டையை பலப்படுத்திக் கட்டியதாகவும் வரலாறு.

சோழர் பாண்டியர் ஆரியச் சக்கரவர்த்திகள் முதலானோர் இக்கோயிலை ஆதரித்தனர். குளக்கோட்டு மன்னன் குளந்தொட்டு வளம் பெருக்கித் திருப்பணிகள் பலவுஞ் செய்வித்தவன் என்பது வரலாறு. இவன் திருக்கோணேச்சர ஆலயத்துக்குத் திருப்பணி மட்டுமன்றிச் சோதிட முற்கூறலுடன் அமைந்த கல்வெட்டு ஒன்றினையுஞ் செய்வித்தான். அது கோட்டை வாயிலிலுள்ள கற் தூண்களிற் பதிக்கப்பட்டு இன்னமும் இருக்கின்றது. அதனை ஈண்டு நோக்குதல் சாலப் பொருத்தமானது.

"முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின் பொண்ணா ததனை யியற்றவழித் தேவைத்து எண்ணாரே பின்னரசர்கள்"

என்பது அக்கல்வெட்டு. குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தைப் பறங்கியர் உடைப்பார்கள். பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்று இதன் எதிர்காலம் பற்றி இங்கு குறிப்பிட்டிருத்தல் வியப்புக்குரியது.

இக்காலத்திற் சிவராத்திரி தினத்திற் கோணேச்சரப் பெருமானுக்கு நகர்வலம் வருதல் என்னும் திருவிழா ஒன்று சிறப்பாக நடைபெறுகின்றது. அக்காலத்திலும் இத்தகைய திருவிழாக்கள் நடைபெற்றன. இவ்வாறாக 1624ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு நாளில் நகர்வலம் வருந் திருவிழா ஒன்று நடைபெற்றது. இதற்காக மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் திருவுலாவாக அடியார்களுடன் கோயிலிலிருந்து நகருக்கு எழுந்தருளினார். அவ்வேளையிற் போர்த்துக்கேயப் படைவீரர் பிராமணர்கள் போல வேடந் தாங்கிக் கும்பிடப்போவது போன்று கோயிலினுட் புகுந்தனர். அந்நேரத்திற் கோயிலின் உள்ளே பூசகர்கள் சிலரும் வேலையாளரும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

கொன்ஸ்ரன்ரயின்டீசா என்பவனுடுடைய தலைமையிற் சென்ற இப்போர்வீரர்கள் எதிர்த்தவர்களை வெட்டிக்கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க வெள்ளி நகைகளையும் விலைமதிப்புமிக்க பிறபொருள்களையும் சூறையாடிக்கொண்டு சென்றனர். அதன் பின்னர் அடியார்கள் சில விக்கிரகங்களை அகற்றி மறைத்து வைத்தனர். போர்த்துக்கேயர் பீரங்கிகளுடன் மீண்டும் வந்து கோயிலை முற்றாக அழித்தனர். போர்த்துக்கேயர் அழித்த கோயிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரியதொரு தீர்த்தக்கேணியும் பிற மண்டபங்களும் இருந்தன என்பது அவர்கள் வரலாற்றுச் சான்றாக வரைந்து வைத்த படம் ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. கொன்ஸ்ரன்ரயின்டீசா செய்த சிவத்துரோகத்துக்காக அவன் 1630ம் ஆண்டு வேறு சிலர் செய்த சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டான்.

புதிய கோயிலின் வரலாறு 1944ம் ஆண்டு திருகோணமலைக் கோட்டையினுள்ளே நீர்த்தேக்கம் ஒன்று அமைப்பதற்கு அகழ்வு வேலை செய்தபொழுது விஷ்ணு மகாலட்ஷ்மி விக்கிரகங்கள் கிடைத்தன. 1956ம் ஆண்டு ஆடி மாதத்திற் சுவாமிமலைக்கு அண்மையிற் கடற்கரை வீதியருகே கிணறு ஒன்று வெட்டப்பட்டபொழுது மூன்று விக்கிரகங்கள் கிடைத்தன. வேறோர் இடத்தில் அகழ்ந்தபொழுது மேலும் இரண்டு விக்கிரகங்கள் கிடைத்தன. இந்த விக்கிரகங்கள் எல்லாம் 1952ம் ஆண்டிற் பிரதிட்டை செய்யப்பட்டன.

1950.07.03 அன்று கலாநிதி பாலேந்திரா அவர்களின் தலைமையிலே திருக்கோணேச்சர ஆலயத் திருப்பணிச் சபை ஆரம்பமானது. இச்சபையின் பெருமுயர்சியாற் பழைய கோயில் இருந்த இடத்தில் மீண்டுந் திருக்கோணேச்சரர் ஆலயம் அமைக்கப்பட்டு 1963.03.03 அன்று மகா கும்பாபிடேகம் நிறைவெய்தியது. பழைய கோயிலுடன் ஒப்பிடும்போது இது சிறிய கோயிலாகவே இருக்கின்றது.

மூர்த்திச் சிறப்பு இக்கோயிலின் இறைவன் பெயர் திருக்கோணேச்சரர் இறைவி பெயர் மாதுமை அம்பாள். தலவிருட்சம் கல் ஆலமரம். இப்பொழுதுள்ள கோயிலை அடுத்து இம்மலையின் வட முனையிற் பாறையினுள் வேர்வைத்து இந்த ஆலமரம் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றது. சோழ நாட்டிலே பழையாறை என்பது கி பி 831 இல் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு குமராங்குசன் என்னும் அரசன் அப்பொழுது ஆட்சி செலுத்தினான். இவனுடைய மகள் சீர்பாததேவி. நகுலேச்சரத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மாருதப்பூரவீகவல்லி என்பவளுக்கு நரசிங்கன் என்னும் மகன் ஒருவன் இருந்தான். அவன் சீர்பாததேவியைத் திருமணஞ் செய்தான். இவர்கள் இருவரும் தம் சுற்றத்தாருடன் இலங்கைக்கு வருவதற்குச் சோழநாட்டிலிருந்து கப்பலிற் புறப்பட்டனர். அப்பொழுது சீர்பாததேவி இலங்கையின் நாட்டு வளத்தைப் பார்க்க விரும்பினாள். எனவே கப்பல் இலங்கையின் கிழக்குக் கரையோரமாகப் பயணஞ் செய்தது.

கப்பல் திருகோணமலையை அண்மித்தபொழுது திருக்கோணேச்சரந் தென்பட்டது. அரசி அவ்விறைவரை வணங்கினாள். அதே நேரம் கப்பலும் நங்கூரம் இட்டது போன்று நிலையாய் நின்றது. அரசி மிகவுந் துயரைடைந்து விக்கினங்களை அகற்றுபவரான விநாயகரைத் தொழுதாள். பின்னர் படகோட்டியைக் கப்பலின் கீழே சென்று பார்க்குமாறு பணித்தாள். கப்பல் தரையிற் பட்டுவிட்டதென்றே அவள் கருதினாள். எனினும் அங்கு தரை இருக்கவில்லை. ஆயின் கடலில் மிகுந்த ஆழத்தில் விநாயகர் விக்கிரகம் ஒன்று இருந்தது. அதனை அவள் கப்பலுக்குள் எடுத்தபின்னர் கப்பல் மீண்டும் ஓடத்தொடங்கியது. இவ்வாறாகக் கடற்கோளால் கீழே சென்ற புராதன ஆலயத்தின் விநாயகர் விக்கிரகம் இவ்வளவு மகிமை உடையதென்றாற் கோணேச்சரப் பெருமானின் மகிமையைக் கூறவும் வேண்டுமா?

திருகோணேச்சரப் பெருமான் திருவுலாவுக்கு எழுந்தருளிய பின்னரே போர்த்துக்கேயர் கோயிலினுட் புகுந்தனர் என்று முன்னர் கூறப்பட்டது. எனவே அந்த விக்கிரகங்கள் காப்பாற்றப்பட்டிருத்தல் வேண்டும். அவை இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட விநாயகரும் சோமாஸ்கந்தருமாக இருக்கலாம். இந்த விநாயகர் விக்கிரகம் மிகவும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. பழைய கோயிலின் பல விக்கிரகங்கள் தற்செயலாகக் கிடைத்தன என்பது இறைவனின் செயல். இதுவும் திருக்கோணேச்சரப் பெருமானின் மூர்த்திச் சிறப்பினையே புலப்படுத்துகின்றது. 

தலச்சிறப்பு இந்தத் தலத்தின் சிறப்புக் காரணமாகவே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்கோணேச்சரப் பெருமான் மீது தேவாரத் திருப்பதிகம் பாடினார். இத்தலத்தின் மகிமையை அடியார்கள் சொல்லக்கேட்டு அவர் இப்பதிகத்தை பாடினார். அருணகிரிநாதர் தாம் பாடிய திருப்புகழ் ஒன்றில் "நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக் முஓனாமலை தலத்தாறு கோபுர" என்று இத்தலத்தை வருணித்துள்ளார்.

குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்குணமலை திருக்குணாமலை திருமலை தென் கைலாயம் கோகர்ணம் திருகூடம் மச்சேஸ்வரம் என்பன இத்தலத்தின் பிறபெயர்கள் ஆகும்.

தீர்த்தச் சிறப்பு இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் எனப்படும். இந்தச் சொல்லின் பொருளை நோக்கும்பொழுது இக்கோயிலின் தீர்த்தச் சிறப்பு புலப்படும். இங்கு தீர்த்தமாடுபவர்களின் பாவம் தொலைந்து விடும் என்பது இதன் கருத்து.

சுவாமி மலையின் தென் பக்கத்தில் ஆழமான ஒரு கிணறாகப் பாவநாசத் தீர்த்தம் இப்பொழுது இருக்கின்றது. இதனைச் சுனை என்று கூற முடியாத அளவுக்கு போர்த்துக்கேயர் பழைய கோயிலை இடித்து அங்கிருந்த தீர்த்தக்கேணியையும் சுனையையுந் துர்த்துவிட்டனர். இப்பொழுதுள்ள கேணியுந் தீர்த்தக் கிணறுஞ் சேர்ந்த பெரிய கேணி ஒன்று முன்பு இருந்ததென ஊகிக்கப்படுகின்றது. அற்புதமான இந்தத் தீர்த்தத்தின் ஒரு சிறு பகுதியையாயினும் பாவநாசத் தீர்த்தக் கிணற்றின் மூலம் திருக்கோணேச்சரர் தம் அடியார்களாகிய நமக்குத் தந்தருளினாரே என்பது இந்தத் தீர்த்தத்தின் சிறப்பு.

தல சிறப்பு:

இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு.

சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் “திரிதாய்” என்று வழங்குகின்றது.

33 அடி உயர சிவபெருமான் சிலை உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 270 வது தேவாரத்தலம் ஆகும்.

திருகோணேஸ்வரம் தோற்றம்:

திருக்கோணேஸ்வரத்தை வட. தென் தொழித் தொல் இலக்கியங்களும், புராணங்களும் போற்றிப் பாடியுள்ளன. திருக்கோணேஸ்வரம் குறித்து பல ஐதீகக் கதைகளும் உள்ளன. தட்சணகைலாயம், மச்சகேஸ்வரம் என்பன திருக்கோணேஸ்வரத்துக்கான மறுபெயர்களாகும். இந்தப் பெயர்கள்  ஏற்பட புராணங்கள் கூறும் நிகழ்வுகள் இந்து மதச் சார்பானவை. 

ஆதிசேடனும் வாயுபகவானும் தங்கள் வலிமையைக் காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரத்தை மூடிக் கொள்ள வாயுபகவான் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றை பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கிழக்குக் கரையோரமாக விழுந்து திருகோணமலையாக உருவாகியது என்பது புராணத்தில் இருந்து கிடைக்கும் செய்தியாகும்.

 இமயமலையின் ஒரு பகுதியே கோணப் பர்வதம் என்ற நம்பிககை காரணமாகக் கோணேஸ்வரத்திற்கு தட்சணகைலாயம் என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம் என்ற பெயரும் உருவாகியதாக தட்சணகைலாய புராணம் கூறுகின்றது. 

புராண இதிகாசங்களில் இருந்து பல மறுபெயர்கள் அறிந்து கொண்ட போதிலும் திருக்கோணேஸ்வரம் என்ற பெயரே நீண்ட கால வழக்கில் உள்ள தலப் பெயராகும்.

நிலாவெளிப் பிள்ளையார் கல்வெட்டில் திருக்கோணேஸ்வரத்தை மச்சகேஸ்வரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோகர்ணத்து சிவாலயமானது 10ஆம், 11ஆம் நூற்றாண்டுகளில் மச்சகேஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கின்றது.

வட இந்தியாவில் கி.பி 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாயு புராணத்தில் திருக்கோணேஸ்வரம் குறித்து சொல்லப்படுவதன் மூலம் இலங்கைத் தீவுக்கு வெளியையும் அதன் புகழ்  பரவியிருந்ததை அறிய முடிகின்றது.

காலக்கோடு:

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கோயில் ஒன்று சமுத்திர ஓரத்தில், மலையின் அடிவாரத்தில் இருந்ததென நம்பப்படுகின்றது. அது கி.மு.306 இல் நிகழ்ந்த கடல் ‌கொந்தளிப்பில் அக்கோயில் கடலுக்குள் மூழ்கிவிட்டதாக இலங்கைச் சரித்திரம் என்னும் நூலில் இவ்வாறு நிகழ்ந்ததெனக் கூறப்பட்டுள்ளது. ஆழ்கடலில் அமர்ந்திருக்கும் கோணேஸ்வர பெருமானுக்கு இன்றும் மலைப் பூஜை செய்யப்படுவதை நாம் காணலாம். மலையின் அடியில் ஆழ்கடலுக்கு எதிரே மலைக்குகை போன்று பண்டைக்கோயிலின் மூல ஸ்தானத்தின் ஒரு பகுதி இன்னமும் எஞ்சியிருக்கின்றது. அது பல்லவர் காலக் குகைக் கோயில் போன்றது. அக்கோயிலின் எஞ்சிய பகுதி கடலுக்கு அடியில் உள்ளதென 1961ல் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்த மெக்வில்சன் என்பர் கூறியுள்ளார். 

கோணேஸ்வரம் கோவில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் வரலாற்றின் ஓர் பக்கத்தை திருப்பிப் பார்த்தால் கி.மு.150 ஆண்டுகளுக்கு முன்னரே எல்லாளன் என்னும் ஈழத்(இலங்கை) தமிழ் மன்னன் கோணேஸ்வரத்துக்கு சென்று வழிபட்டதாக சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோணேஸ்வரம் கட்டப் பட்டிருக்க வேண்டும்.

கோவில்’என்னும் தமிழ்ச் சொல்லானது பெரும்பாலும் இந்தியாவில் கட்டப்பட்டிருக்கும் வைஷ்ணவக் கோவில்களில் காணப் படாத ஒன்று..!ஆனால் இந்தக் கோவிலில் “கோவில்” என்னும் தூய தமிழ்ச் சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாவிக்கப்பட்டதிலிருந்து இது சைவர்களுக்கும் தமிழர்களுக்கும் உரிய கோவில் மட்டுமல்ல தமிழர் ஒருவரால் கட்டப் பட்ட கோவில் என்றும் தெரியவருகிறது.

கோணேஸ்வரம் கோவிலுக்கு “கோகர்ணம்” என்றும் ஓர் பெயர் வரலாற்றில் புராண காலத்தில் வழங்கப்பட்டதாக பழைய நூல்களின் மூலம் அறிய முடிகிறது!சைவர்களின் பிரதானக் கடவுளாக ஈழத்திலும் சிவனையே தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை முன் நிறுத்தி வணங்கி வருகிறார்கள்.

பழங்கால மன்னனாகிய இராவணன் கூட ஓர் மாபெரும் சிவ பக்தன்தான். பல்லவர்,பாண்டியர்,சோழர்களின் வணக்கத்துக்கு உரிய பிரதான கடவுள் சிவன் ஆகும்.

சிவனின் காலடியில் கங்கை நதி ஊற்றெடுத்து வந்து கலப்பதாக புராணங்கள் கூறுவது போல் தென் இலங்கையில் ஊற்றெடுத்த மகாவலி கங்கையானது இறுதியில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்குள் நுழைந்து கடலில் கலக்கும் இடம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூருக்கு அருகே கங்கை என்னும் சிற்றூரில்தான் உண்டு. இந்தக் கட்டுரையாளரின் பிறந்த மண்ணும் அதன் அருகேதான் உண்டு! ..அங்கிருந்து ஓர் உயரமான இடத்தில் இருந்து பார்த்தால், கோணேசர் கோவிலை..தொலை நோக்கி மூலம் காணலாம்!

கோணேசர் கோவில் தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிசம் என்று சொன்னேன்..அதற்கு ஏதுவாக ..பல அரிய சான்றுகள் உண்டு..!..அதில் ஒன்றுதான் இராவணன் கல்வெட்டு என்று அழைக்கப்படும் ஓர் பகுதியாகும். கோவிலின் மிக அருகில், வலது புறத்தில் உள்ள பெரும் மலையொன்றை இரண்டாகப் பிளந்ததுபோல் செங்குத்தாக சுமார் முன்னூறு அடி ஆழத்துக்குமேல் கடலுக்குள் பிளந்து – புதைந்து கிடக்கும் அந்த இடத்தைத்தான் இராவணன் கல்வெட்டு என்று அழைக்கிறார்கள்..!..அந்தப் பகுதி மிக..மிக ஆழம் கூடிய பகுதி ஆகும்..தோணிகளில் அதனருகே போகும்போது..

காந்தம் போல் அந்த மலை தம் தோணிகளை இழுப்பதாக நமது மீனவர்கள் கூறுவதுண்டு..இது புவியியல் ரீதியாக ஆராயப் படவேண்டிய ஒன்று..! அதற்கு அண்மையில் இராவணனின் வெண்கலச் சிலை ஒன்றும் உள்ளது!..என்பது மட்டுமல்ல..இந்த கோவிலில் இராமருக்கு என ஓர் குடிசையைக்கூட தமிழர்கள் கட்டி வைக்கவில்லை..ஆனால்.. இந்த கோணேஸ்வரம் கோவிலில் இராவணனுக்கும் ஓர் சிறிய கோவில் உண்டு என்பதுதான் கவனிக்கப் படவேண்டிய ஒன்று..!..சிவனை வழிபடும் பக்தர்கள் இராவணனையும் வழி பட்டுச் செல்வார்கள்!

கோவிலுக்கு அண்மையில் உள்ள ஆழக் கடலுக்குள் தான் நன்னீர் நதி ஊற்று இருக்கிறது..இது கதை அல்ல!..பூகோள ரீதியாக உள்ள வரலாறு..இந்த சிறு நதியில் இருந்தே பாபநாச தீர்த்தம் ‘ என்னும் ஊற்று கோணேசர் மலையை சுற்றி சுரக்கிறதாம்!..இந்த கல்வெட்டுக்கும் பாபநாச தீர்த்ததுக்கும் அன்றில் இருந்து இன்று வரை கடலைப்பார்த்தவாரு பூசை நடப்பதுண்டு!
அன்றைய வரலாற்றின்படி, கி.மு.205இல் உள்ள திராவிடக் கட்டிடக் கலை அமைப்பின்படியே சுவாமி மலையில் அமைந்துள்ள கோணேஸ்வரம் கோவில் கட்டப் பட்டுள்ளதாக சொல்வார்கள்..!

ஆனால்… அதற்கும் சில நூற்றாண்டுக்கு முன்னர் வடிக்கப் பட்ட கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கும் கி.மு..இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட வரலாற்று- புராண நூல்களில் கோணேஸ்வரத்தின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

.மு. 400 க்கும் கி.மு.100க் குமிடையில் எழுதப்பட்ட மகா பாரதத்தில் ‘கோணேஸ்வரம்’ கோவிலை கோகர்ணம்’ என்று குறிப்பிடுகிறார்கள் !… பாரதம்..இராமாயணம் இரண்டிலுமே இடம் பெற்ற கோவில்தான் எங்கள் கோணேஸ்வரம் ஆகும்..ஆனால்..இராவணன் கல்வெட்டு..கி.மு.1580 இல் கட்டப் பட்டதாக கட்டிடக் கலை நிபுணர்கள் கூறுகிறார்கள்!..எனவே..அதற்கும் பல் ஆண்டுகளுக்கு முன்னர்தான் கோணேசர் கோவில் கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறதல்லவா..?
ஆனால்.. ‘வாயு புராணம்’ என்னும் வரலாற்று நூலில்Paul E .Peiris ..என்ற வரலாற்று ஆசிரியர்..கோணேசர் கோவில் கி.மு.543-505 கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்..இதையே..மற்றும் ஓர் வரலாற்று ஆசிரியரான..எஸ்.பத்மநாதனும் உறுதிப் படுத்துகிறார்..!

நகுலேஸ்வரம் ..(கீரிமலை)..திருக்கேதீஸ்வரம் ..(மன்னார்)..முனீஸ்வரம் ..(சிலாபம்)..தேனாவரம் (தேவன்துறை) கோணேஸ்வரம் ஆகிய ஐந்து கோவில்களுமே பழங் காலத்தில் சிவனுக்காக தமிழர்களால்.. கட்டப் பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க கோவில்களாகும்!..இந்த கோவில்கள் அனைத்துமே புராணங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. அருணகிரிநாதர், திருஞான சம்பந்தர், சுந்தரர்
போன்றவர்கள் கோணேஸ்வரத்துக்கு வந்து தரிசித்துச் சென்றுள்ளனர். திருஞானசம்பந்தரால் பாடப் பட்ட தேவாரப் பதிகமும் கோணேஸ்வரம் பற்றி குறிப்பிடுகிறது..ஆனால் ..சம்பந்தரின் காலம்..கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகும்!

இராவணன் சிவனையே முழு முதற் கடவுளாக வழி பட்டவன் என்பது குறிப்பிடத் தக்கது..அதுமட்டுமன்றி..அவன் ஓர் சிறந்த இசை வல்லுனரும் ஆவான்.இராவணன் யாழ் வாசித்துப் பாடினால் சிவன் கூட இமய மலையில் இருந்து இறங்கி வருவார் என்று நான் கூறவில்லை..எந்த இராமாயணம் இராவணனை பெண் பித்தன்..அசுரன்..நரகாசுரன் என்று கூறியதோ ..அந்த இராமாயணம் தான் இதையும் கூட குறிப்பிட்டுள்ளது..!

பொது தகவல்:

காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.

மாதுமையாள் சமேத கோணேஸ்வரர், சந்திரகேசர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர், வீரசக்தி, அன்னப்பறவை முதலான தெய்வத் திருவுருவங்கள் அமைந்துள்ளது.

தலபெருமை:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உலகப் புகழ்பெற்ற திருகோணமலை சிவன் கோயில் உள்ளது. கச்சியப்ப சிவாச்சாரியார் சிவபெருமானின் ஆதி இருப்பிடங்களில் திபெத்திலுள்ள திருக்கயிலாய மலையினையும், சிதம்பரம் கோயிலையும், திருகோண மலையையும் கந்த புராணத்தில் மிக முக்கிய மூன்றினுள் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு சுமார் 1700 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் இருந்தன. இங்கு மகாவலி கங்கை அருகிலுள்ள கடலுடன் கலப்பதால் இப்பகுதி முழுவதும் நீர்வளம், நிலவளம் பெற்று செழிப்பாக இருந்தது. மேலும் குறிஞ்சியும், நெய்தலும், முல்லையும் ஒன்று சேருமிடத்தில் இத்தலம் அமைந்திருந்தது. சமுத்திரக்கரை ஓரமாக மலை அடிவாரத்தின் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. பிறகு கி.மு 306 ல் ஏற்பட்ட கடல்சீற்றத்தினால் கடலில் மூழ்கி விட்டதாகவும் இன்னும் மலையின் அடியில் கடலுக்கு மிக அருகில் மலைக்குகை போன்ற பண்டைய கால கோயிலை நினைவுபடுத்தும் பகுதிகள் காணப்படுகின்றன என்கிறார்கள்.

இத்தலத்திற்கு திருக்குணமலை, திருமலை, தட்சிண கயிலாயம், கோகர்ணம், திரிகூடம், மச்சேஸ்வரம் எனப் பல பெயர்கள் உண்டு. அக்காலத்தில் தாமரைத்தண்டு நூலினால் திரி செய்து விளக்கேற்றி இக்கோயிலில் வழிபட்டு வந்தனர். இதன் காரணமாக திரிதாய் என்ற பெயரும் உண்டு. இறைவன் திருக்கோணேஸ்வரர், இறைவி மாதுமையாள், தலவிருட்சம் கல்லால மரம், முதலில் கல்லால மரத்துக்கு பூஜை செய்துவிட்டு, பின்னரே மூலவர் மற்றும் கோயில் சன்னதிகளில் பூஜை நடைபெறுகிறது. இங்குள்ள மிக முக்கிய தீர்த்தம் பாவநாசம் இதில் தீர்த்தமாடினால் பாவங்கள் தொலைந்துவிடும் என்பது நம்பிக்கை. 1624 ல் ஏற்பட்ட போர்த்துக்கீசிய படையெடுப்பில் இத்தீர்த்தக் கேணியையும் சுனையையும் தூர்த்துவிட்டனர். தற்போதுள்ள கேணிதீர்த்தம் ஒரு சிறு பகுதி மட்டும் கிடைத்துள்ளது. இக்கோயிலை பல்லவர்கள், சோழர்கள் பாண்டியர்கள் மற்றும் பல அரசர்கள் திருப்பணிகள் செய்து மிக நல்ல நிலையில் வைத்திருந்தனர். ஏராளமான தங்க நகைகளும் நவரத்தினங்களும் இக்கோயிலுக்குச் சொந்தமாக இருந்தன.

1624 வருடம் சித்திரை புத்தாண்டு தினத்தில் சுவாமி மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் நகர்வலம் வந்த வேளையில் போர்ச்சுகீசியத் தளபதி வீரர்களுடன் பக்தர்கள் போல வேடமிட்டு கோயிலினுள் சாமி நுழைந்த ஆங்கிருந்தவர்களை வெட்டிக் கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க நகைகள், நவரத்தினங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர். ஆசியாவிலேயே மிகச் செழிப்பான செல்வவளம் கொண்ட இக்கோயில் முற்றிலும் சூறையாடப்பட்டது. பின்னர் கேள்வியுற்ற பக்தர்களும், அர்ச்சகர்களும் சில முக்கிய விக்கிரகங்களை உடனடியாக அகற்றி, குளங்களிலும் கிணறுகளிலும் மறைத்து வைத்தனர். சில விக்கிரகங்களை அருகிலுள்ள தம்பலகாமம் என்ற இடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்து ரகசியமாக பூஜை செய்து வந்தனர். தற்போது அங்கே ஆதிகோணநாதர் என்ற பெயரில் இறைவன் திருவருள் பாலிக்கிறார். பின்னாளில் திருக்கோணமலை கோயிலுக்குச் சொந்தமான மானியங்களில் பெரும்பகுதி இக்கோயிலுக்கும் சொந்தமாயிற்று. பராந்தக சோழனுக்குப் பயந்து பாண்டிய மன்னன் இலங்கையில் பாதுகாப்பாக மறைந்திருந்த காலத்தல் தாம்பலகாமம் ஆதிகோணேச்சுவரருக்கு பல திருப்பணிகள் செய்து வழிபட்டதாக தலபுராணம் தெரிவிக்கிறது. நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருகோணமலை தலத்தாறு கோபுர என்று திருப்புகழ் பாடியுள்ளார்.

ஆயிரங்கால் மண்டபமும், பெரிய தீர்த்தக் கேணியும் மற்றும் பிற மண்டபங்களும் இருந்தன என்பதை விஸ்பன் நகரில் உள்ள வரலாற்றுச் சான்றான படத்தின் மூலமே அறிய முடிகிறது. 16-ம் நூற்றாண்டில் வந்த குளக்கோட்டன் என்ற மன்னன் இக்கோயிலை மீண்டும் புதுப்பித்தான்

முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை

பின்னே பறங்கி பிரிக்கவே

பூனைக்கண் புகைக்கண் செங்கண் ஆண்டபின்

தானே வடுகாய் விடும் -கல்வெட்டு

என்ற பாடல் மூலம் குளக்கோட்ட மன்னனின் திருப்பணி மட்டுமின்றி, சோதிட முற்கூறலும் கல்வெட்டு மூலம் உண்மையை உணர்த்துகிறது. குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தை போர்த்துகீசியர் உடைப்பார்கள். பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்று கோயிலின் எதிர்காலம் பற்றிய கல்வெட்டுக் கருத்து நம்மை வியக்க வைக்கிறது. போர்ச்சுக்கீசிய படையினால் சிதைவிடைந்த இக்கோயிலின் ஒரே ஒரு தூண் மட்டும் பின்னர் 1870 ல் சுவாமி பாறைக்கு அருகில் நினைவுச்சின்னமாக பக்தர்களின் துணையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மனதை ரணமாக்குகிறது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போதும் எவ்வித பூஜைகளும் இங்கு நடைபெற அனுமதிக்கப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாலுமிகள், பக்தர்கள், சுவாமி பாதைக்குச் சென்று பூ, பழம், தேங்காய் உடைத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

பின்னர் 1944 ஆம் ஆண்டில் திருகோணமலை கோட்டையினுள் நீர்த்தேக்கம் அமைக்க அகழாய்வு செய்தபோது சில விக்கிரகங்கள் கிடைத்தன. பின்னர் 1950 ஆண்டில் கடற்கரை அருகில் பொதுக்கிணறு தோண்டியபோது மேலும் சில விக்கிரகங்கள் கிடைத்தன. இறையருளால் அனைவரும் வியக்க மாதுமையாள் சமேத கோணேஸ்வரர், சந்திரகேசர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர், வீரசக்தி, அன்னப்பறவை முதலான தெய்வத் திருவுருவங்கள் வெளிப்பட்டன. அவை அனைத்தும் 1952 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மீண்டும் இக்கோயில் புத்துயிர் பெற்றது. பழைய கோயிலுடன் ஒப்பிடுகையில் இது சிறிய கோயில். இருப்பினும் எம்பெருமான் திருவருளினால் மீண்டும் அனைத்து விக்கிரகங்களும் வெளிப்பட இறையருள் போற்றத்தக்கது.

இங்கு ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஐம்பொன் மூர்த்தங்கள் மிக வடிவுடன் தேவ மண்டபத்தில் காட்சி தருகின்றன. சிவராத்திரி விழாவும், ஆடி அமாவாசை பெருவிழாவில் எம்பெருமான் கடலில் தீர்த்தமாடுவதும். பங்குனி தெப்பத் திருவிழாவும் மிகச் சிறப்பானவை. பாண்டியனின் கயல்சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது. இக்கோயிலின் தொன்மையை உணர்த்துகிறது. கோயில்முன் 33 அடி உயரமான சிவபெருமான் சிலை ஒன்று அமைந்துள்ளது.

#பூசைகள் மற்றும் #திருவிழா:

இங்கு ஆறுகாலப் பூசைகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன. சிவராத்திரிக் காலத்திலே திருக்கோணேச்சரப் பெருமான் நகரத்தினுள்ளே திருவுலாவாக எழுந்தருளுதல் கண்கொள்ளாக் காட்சியாகும். இக்கோயிலின் மகோற்சவம் பங்குனி உத்தரத்திலே தொடங்கிப் 18 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள்.

ஆடி மாதம் போலவே, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோணேசர் கல்வெட்டு இக்கோயிலின் சரித்திரத்தை உரைநடையிலும் கூறுகின்றது. சீர்பாதகுலவரலாறு மட்டக்களப்பு மான்மியம் ராஜாவளிய மச்சபுராணம் திருக்கோணாசலப்புராணம் இலங்கைச் சரித்திரம் (தெனன்று) தட்சின கைலாய புராணம் திருக்கோணமலைத் திருவுருவங்கள் குடுமியா மலைச் சாசனம் திருக்கோணமலைக் கோட்டை வாயிற் கல்வெட்டு முதலியன இக்கோயில் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தருகின்றன. திருக்கோணேச்சரத் தேவாரத் திருப்பதிகம் கோணேஸ்வரர் குறவஞ்சி திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி முதலியன இக்கோயில் மேல் எழுந்த இலக்கியங்களாகும்.

அமைவிடம் :

இலங்கையின் கிழக்கு திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம் திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியாகிய மகாவலிகங்கை அவ்விடத்தில் கடலுடன் கலப்பதால் அப்பிரதேசம் இயற்கை வளத்துடன் சிறந்து விளங்குகின்றது. அங்கு சுவாமிமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்றின் உச்சியிலே திருக்கோணேஸ்வரர் கோயில் உள்ளது. இது அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட புதிய கோயிலாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மயூரநாதசுவாமி அபயாம்பிகை மயிலாடுதுறை..

உமையம்மை மயில் வடிவில் ஈசனை வழிபட்டு சுயவடிவம் பெற்ற தலமானதும், உலகப் புகழ்பெற்ற தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில்...