Friday, February 6, 2026

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம்.

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம் என்ன?
கையில் வேலைத் தாங்கியிருப்பதாலேயே வேலன்.மிருகங்களை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தும் வேலினையே வேலன் தாங்கியுள்ளான். அதே போன்று தடி (தண்டு) போன்ற ஆயுதத்தைத் தாங்கியிருப்பதால் தண்டாயுதபாணி எனவும் அழைக்கப்படுவான்.

சரி, முருகனின் ஊர்தி எது தெரியுமா? முருகனின் ஊர்தி (வாகனம் என்பது வடமொழிச் சொல்) எது என்றால் மயில் என்றே பலரும் கூறுவார்கள்; ஆனால் தமிழிலக்கியங்களின் படி அது உண்மையன்று. பெருமளவான சைவர்கள் கூறுவது முருகன் வாலிபனாக சூரனுடன் போரிட்டு, அவனைக்கொன்று மயில் வாகனமும் (தமிழில் ஊர்தி) சேவலைக் கொடியும் ஆக்கினான் என்ற கந்தபுராண விளக்கமே. இவர்களிடம் அவ்வாறாயின் எவ்வாறு முருகன் குழந்தையாகவிருக்கும்போதே பிள்ளையாருடன் மாம்பழத்திற்குச் சண்டையிடும்போது மயிலேறி உலகம் சுற்றினார்? எனக் கேட்டால் பதிலில்லை { புராணத்தில் முருகன் சூரனுடன் சண்டைக்கு முன்னர் இடம்பெற்றதாக மாம்பழச் சண்டைக்கதை உள்ளது]. இந்துமதத்தை ஒரே மதமாகப் பார்த்தால் மயில் ஊர்தி கதை இரு வேறு வகையாக மகாபாரதத்தில் சொல்லப்படுகின்றது.👇
👉1. மகாபாரதத்தின் சல்ய பருவத்தின்படி அக்கினி கோழியையும், இந்திரன் மயிலையும் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது.
👉2. மகாபாரதத்தின் இன்னொரு இடத்தில் கருடன் மயிலைக் கொடுத்தாகவும் உள்ளது.

👉இந்து மதத்தின் விட்டுணு புராணத்தில் (Vishnu Purana) விட்டுணுவே முருகனிற்கு மயிலையும் சேவலையும் கொடுத்ததாகவும் உள்ளது.
பார்த்தீர்களா! 🧐ஒரு மயிலிற்கு ஒரே மதத்தில் எத்தனை கதைகள் என்று! இதைத்தான் `ஒரு உண்மையினை மறைக்கப் பொய் சொல்ல வெளிக்கிட்டால் பல பொய்கள் சொல்ல வேண்டிவரும்` என்பார்கள்.
👉👇சரி, புராணங்களை விடுவோம். தமிழிற்கு வருவோம். அதற்கு தமிழில் முருகன் ஒரு எல்லா ஆற்றலுமுடைய கடவுள் (supreme god )அல்ல, மாறாக குறிஞ்சி நிலத் தலைவன் என்பதனையும், சமற்கிரத சுப்பிரமணியன்- தமிழ் முருகன் வேறுபாட்டையும் அறிந்திருக்கவேண்டும்.


இப்போது சங்க இலக்கியங்கள் சிலவற்றினைப் பார்ப்போம்.
👇👇👇
`சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை,
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு`
(பதிற்றுப்பத்து 11-5-6)
👆👆👆
மேலுள்ள பாடலில் நெடுஞ்சேரலாதன் அரசனை குறிஞ்சி நிலத் தலைவன் முருகனுடன் (வேள்) ஒப்பிடப்படும் பாடலில் முருகனின் ஊர்தியாக யானை (களிறு) குறிப்பிடப்படுகின்றது.

அடுத்து ஒரு புறநானூற்றுப் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.
👇👇👇
`பனைக் கொடியோனும், மண்ணுறு திருமணி
புரையும் மேனி விண் உயர் புட்கொடி
விறல்வெய்யோனும், மணிமயில் உயரிய மாறா
வென்றிப் பிணி முக உணர்தி ஒண் செய்யோனும்.’
-புறம் : 56 : 1.8
👆👆👆
இப் பாடலில் மயிலைக் கொடியாகவும், யானை (பிணி முக) ஊர்தியாகவும் முருகன் கொண்டுள்ளார். இப் பாடலிற்கு சிலர் பிணிமுகம் என்பதற்கு மயில் எனச் சிலர் பொருள் கூறியுள்ளபோதும், பிணிமுகம் என்பது யானையினையும் குறிக்கும்.


மேற்கூறிய பாடலில் மயிலே கொடியாகவும், மயிலே ஊர்தியாகவும் வருவது பொருத்தமில்லை என்பதாலும், பிற சங்கப் பாடல்களில் யானையே ஊர்தியாகக் கொள்ளப்படுவதாலும் நான் இப் பாடலில் வரும் `பிணிமுகம்` என்பதனை யானை என்றே துணி கின்ற

👉👆எனவே தமிழிலக்கியங்களில் யானை தான் குறிஞ்சி நிலத் தலைவனின் ஊர்தியாகக் குறிப்பிடப்படுவதனைத் தெளிவாக காணலாம். யானைப் படை என்று ஒன்றே சில நூற்றூண்டுகளிற்கு முன்னர்வரைக் காணப்பட்டமையால் இது அறிவிற்கும் பொருத்தமானது. மறுபுறத்தே மயிலிற்கு மேல் ஏறியிருந்தால் மயிலே சுமையினைத் தாங்குமா?
அவ்வாறாயின் எவ்வாறு மயில் பிற்காலத்தில் ஊர்தியாகியது? என்ற கேள்வி எழலாம். எல்லாம் பார்ப்பனியத் திணிப்பே. இது குப்தர் காலத்தில் தமிழ் இயற்கைசார் முருகனையும் வடமொழி புராண ஸ்கந்தனையும் இணைத்தபோது நடாத்திய திருவிளையாடல்.

#சேவல்_கொடி
சேவல்தானே கொடி என்கின்றீர்களா? கோழியினை கொடியாக திருமுருகாற்றுப்படை கூறுகின்றது.
👇👇👇
கோழியோங்கிய வென்றடு விறற் கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூரரமகளிர் ஆடும் சோலை”
- திருமுருகாற்றுப்படை 38
👆👆👆

பொருள்-{வில்லும் வேலும் ஏந்தி இரவுக் குறியிடத்தில் காதலியைக் காணச் சென்று கொண்டிருந்த வீரனை, மலைச் சாரல்களில் உலவித் திரிந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த அணங்கும் சூரும் ஆன பெண் தெய்வங்கள், தற்போது திருப்பரங்குன்றத்து மலைச்சாரலில் உள்ள சோலைகளில் தம் அச்சுறுத்தும் ஆற்றலை இழந்து எளிய மானிட மகளிரைப் போல முருகனது சேவற்கொடியை வாழ்த்தியவாறு விளையாடிக் கொண்டிருந் தார்கள்.}

இப் பாடலிலேயே கோழி முருகனின் கொடியாக முதலில் காணக்கிடைக்கின்றது. அத்துடன் முருக வழிபாட்டிற்கு முந்திய பெண் தெய்வ வழிபாட்டினையும், அதனை வெற்றி கொண்டே முருக வழிபாடு தோன்றியது என்பதும் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களினதும் முதல் தெய்வங்கள், ஏனைய பழங்குடிகளைப் போன்று பெண் தெய்வங்களே. அது தொல்காப்பிய - சங்க இலக்கியங்களிற்கு முற்பட்டது. {இது பற்றி யாருமே எழுதாமல், மாயன்-சேயோன் என்பதிலிருந்தே தொடங்குவது பெரும்பாலும் ஆண்கள் எழுதுவதாலும், பிற மானிட வரலாற்றாசிரியர்களான கார்ல் மார்க்சு- ஏஙகல்சு போன்றோரின் எழுத்துக்களை உள்வாங்கமையுமே காரணங்கள் என நினைக்கின்றேன்}.

திருமுருகாற்றுப்படைக்கு முன்னரான காலத்தைய புறநானூறு (56), அகநானூறு (149) என்பன மயிலே முருகனின் கொடியாகக் காணப்பட்டது.

👉👆சரி, இந்த மயில் , கோழி எல்லாம் எவ்வாறு முருகனின் கொடியாயிற்று எனப் பார்ப்போம். அறிஞர் வானமலையின் கருத்துப்படி மயில், கோழி என்பன வெவ்வேறு பழங்குடி இனங்களின் குலக்குறிகள். அத்தகைய குடிகளை குறிஞ்சித் தலைவன் வெற்றிகொண்டதன் குறியீடுகளே அந்த மயிலும் கோழியும் என்கின்றார்.
இறுதியாக #வள்ளி கதையினையும் சுருக்கமாகப் பார்த்தால், வள்ளிக்கிழங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட வேளாண்மைச் சமூகத்திற்கும், வேட்டுவ குடிகளும் (வேலன்) ஒன்றிணையும் ஒரு நிகழ்வே அதுவாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம்.

முருகன் கையில் வேலும் சேவற்கொடியும் இருக்கக் காரணம் என்ன? கையில் வேலைத் தாங்கியிருப்பதாலேயே வேலன்.மிருகங்களை வேட்டையாடுவதற்குப் ...