Saturday, September 23, 2023

ஏனாதிநாத நாயனார் விபூதி மேற் பத்தி மிகுதிசிவசின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர்

ஏனாதிநாத நாயனார் புராண சூசனம்

விபூதி மேற் பத்தி மிகுதி
சிவசின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர். அது "கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை - மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகிற் - றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி - சிங்காரமான சிவனடி சேர்விரே" என்னும் திருமந்திரத்தால் உணர்க. இவ்விபூதியிலே மிகுந்த பத்தியுடையோர் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர். அது "எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி - யுவராதே யுவரரைக் கண்ட போது வுகந்தடிமைத் திறநினைந்திங் குவந்து நோக்கி - யிவர்தேவரிவர் தேவ ரென்று சொல்லி - யிரண் டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் - கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தால் அறிக.

இவ்விபூதியில் எல்லையின்றி மிகுத்த பத்தியாற் சிறந்தவர் இவ்வேனாதிநாத நாயனார் என்பது, இவர் வாள் வித்தை பயிற்றலினாலே தமக்கு வரும் வளங்கள் எல்லாம் விபூதி இட்ட அடியார்களுக்கே ஆக்கினமையாலும், தமது பகைவன் நீதி இன்றி ஆயுதம் பிடித்துத் தம்மைக் கொல்லப் புகுந்தபோது, தாம் அதனைத் தடுத்து அவனைக் கொல்லுதற்கு வல்லராய் இருந்தும், அவனது நெற்றியில் விபூதியை நோக்கி, அவன் கருத்தே முற்றும்படி நின்று பெருந்தகைமையாலும் தெளியப்படும்.

சிவதருமோத்திரத்திலே "படைபிடித்துத் தங்கையிற் பற்றாரைச் சமரிற் பாழ்படுக்கப் போர் புரியும் பார்ப்பாரைப் பற்றா - ருடலிறுத்தா ரேலவர்க்குப் பிரமகத்திபாவமொன்றுவதன் றெனவுணர்க." எனக் கூறுதலானும், அதிசூரன் விபூதி யிட்டவனாயினும் ஆயுதம் பிடித்துத் தம்மைக் கொல்ல வந்தமையானும், அவனைக் கொல்லுதல் பாவமாகாதே எனின், சத்தியம் நீ சொல்லியது ஆயின், இவர் தமக்கு அவன் தீது செய்யினும் தாம் அவனைக் கொல்லில் தமக்கு மறுமைக்கண் நரகத்துன்பம் வருமென்னும் அச்சத்தால் ஒழித்தவரல்லர்; சிவனடியார் யாதுசெய்யினும் அதுவே தமக்கு இனிமையாம் என்னும் ஆர்வமிகுதியால் ஒழித்தவர் என்க. தன் உயிரை விடுத்தல் பாவம் என்றும் தன்னுயிரைக் காத்தலினும் வேறாகிய புண்ணியம் ஒன்றும் இல்லை என்றும், சிவசாத்திரங்கள் கூறவும், இவர் தமது பகைவன் தம்மைக் கொல்லப் புகுந்த போது அக்கொலையைத் தடுத்துத் தம்முயிரைக் காக்கவல்லராய் இருந்தும், அது செய்யாமை பாவமன்றோ எனின், கருணாநிதியாகிய சிவன் பெறுதற்கரிய இம்மானுட சரீரத்தை எமக்குத் தந்தது தம்மேலே பத்தி செய்து முத்தி பெறுதற் பொருட்டாதலானும், இச்சரீரம் இல்வழி அது கூடாமையானும், அவருக்குத் திருத்தொண்டு செய்தற் பொருட்டு இச்சரீரத்தைக் காத்தல் புண்ணியமும், அதனைச் சிறிதும் நோக்காது கோபம் நோய் முதலிய ஏதுக்களாலே இதனைப் போக்குதல் பாவமும் ஆயின, இந்நாயனார் தமது சரீரத்தை இங்கே பேணாது நின்றமைக்கு ஏது, சிவன்பாலுள்ள பத்தியேயாதலால், அது இத்துணைத்தென்று கூறலாகாத பெரும் புண்ணியமாதல் காண்க; இக்கருத்து நோக்கி அன்றோ, குருலிங்க சங்கமங்களுக்கு இடையூறு வரும் வழிப் பத்தி மிகுதியாலே தன்னுயிர் விடுத்தல் புண்ணியமாம் என்று சிவாகமங்கள் கூறியதூஉமென்க.

முத்திநாதனும் அதிசூரனும் யாண்டுப் புக்கார்கள் எனின், மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்ற பெரும் பாதகத்தால் நரகத்தில் வீழ்ந்தார்கள் என்றே கொள்ளப்படும், அவர்கள் சிவவேடம் தரித்தமையால் பயன் இல்லையோ எனின், அரசனிடத்துச் சிறிதும் பத்தியின்றி அவனுக்கு உரிய அடையாளங்களைத் தரித்துப் பிறரை வஞ்சித்து அவருக்குத் தீங்கு செய்தோர், அவ்வடையாளம் தரியாது தீங்கு செய்தோரினும் மிகப்பெருந்தண்டத்தை அவ்வரசனாலே பெற்று வருந்துவர் அன்றோ. அது போலவே, சிவனிடத்துச் சிறிதும் பத்தியின்றி அவருக்கு உரிய சின்னங்களைத் தரித்துப் பிறரை வஞ்சித்து அவருக்குத் தீங்கு செய்தோர், அச்சின்னங்கள் தரியாது தீங்கு செய்தோரினும் மிகப் பெருந்தண்டத்தை அச்சிவனாலே பெற்று வருந்துவர் என்பது தெள்ளிதிற்றுணியப்படும். ஆதலால், பெரும் பாதகர்களாகிய அவ்விருவரும் சிவவேடத்தாற் சிறிதும் பயன் பெறாது மிகக் கொடிய நரகத்தில் வீழ்ந்தார்கள் என்பது சத்தியம். சிவன் விதித்தவழி ஒழுகாதவர்க்கு வேடத்தாற் பயன் இல்லை என்பது, "வேடநெறிநில்லார் வேடம்பூண்டென் பயன் - வேட நெறி நிற் போர் வேட மெய் வேடமே - வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் - வேட நெறி செய்தால் வீடதுவாகுமே" எ-ம். "தவமிக்கவரே தலையான வேட - ரவமிக் கவரே யதிகொலை வேட - ரவமிக் கவர்வேடத் தகாதவர்வேடந் - தவமிக் கவர்க்கன்றித் தாங்க வொண்ணாதே" எ-ம். திருமந்திரத்திற் கூறுமாற்றாற் காண்க. எங்ஙனமாயினும், அவர்கள் சிவவேடம் தரித்தவர்கள் அன்றோ; அது நோக்காது நீர் அவர்களைப் பாதகர்கள் என்று இகழ்ந்தது என்னை எனின், "மாதவ வேடங் கொண்ட வன்கணான்" என்றும் "முன்னின்ற பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்" என்றும் ஆசிரியர் சேக்கிழார் நாயனார் இகழ்ந்தமையின், யாமும் இகழ்ந்தோம் என்க. அவர் இகழ்ந்தமை குற்றமாகாதோ எனின், ஆகாது. மெய்ப்பொருணாயனாரும் ஏனாதிநாத நாயனாரும் பிறிதொன்றும் நோக்காது இவர் சிவனடியார் என்பது நோக்கி அவர்கள் கருத்தின் வழி நின்றமைக்குச் சிவபத்தியே ஏதுவாயினமை போல, சேக்கிழார் நாயனார் அப்பாதகர்கள் இம்மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்றார்களே என்பது நோக்கி இகழ்ந்தமைக்கும் சிவபத்தியே ஏதுவாயினமையால் என்க.

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Followers

காலபைரவர் ராகு காலம், யம கண்டம் நேரங்களில் சக்தி மிகுந்தவர்.

_மஹா பைரவ கவசமம் அழிக்க இயலாத பாதுகாப்பின் பரம பரிகாரம்!_ பைரவர் பக்தி வழியில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டத்தில் பைரவர்...