Tuesday, April 16, 2024

திருத்தூங்கானைமாடம்(பெண்ணாடம்)அருள்மிகு-சுடர்க்கொழுந்தீசர்_திருக்கோயில்

#அப்பர்_சுவாமிகள் தனது #திருத்தோள்களில் #சூலம் மற்றும் #இடபம்_முத்திரை_பெற்ற_ஐதீகம்:
சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான,
63 நாயன்மார்களில் ஒருவரான 
எம்பிரான் #திருநாவுக்கரசர் நாயனார் என்ற
#அப்பர்_பெருமான் (சுவாமிகள்)
#திருநீறு #சூலம்_இடபம் தன் #திருத்தோள்களில்_பெற்ற_ஐதீகவிழா
(#சிவபூதம்_இலச்சினை_இட்ட_ஐதீகவிழா)
நாளை-17.04.2024-
இரவு-7.30மணிக்கு
#திருத்தூங்கானைமாடம்(பெண்ணாடம்)-அன்னை-#அழகியகாதலி உடனமர் அருள்மிகு-#சுடர்க்கொழுந்தீசர்_திருக்கோயில் 

திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாரூரில், வேளாளர் மரபில் பிறந்தவர் மருள்நீக்கியார். பின்னாளில் திருநாவுக்கரசராக உயர்ந்தவர் இவரே அவரது சகோதரி திலகவதியார் சிவபக்தை. வடநாட்டிலுள்ள பாடலிபுத்திரம் சென்ற மருள்நீக்கியாரை, சமணர்கள் சமண மதத்தில் இணைத்தனர். தருமசேனர் என்ற பெயரையும் சூட்டினர். தன் தம்பி சமண மதத்தைச் சார்ந்துவிட்டதை அறிந்து, சிறந்த சிவபக்தையாக விளங்கிய திலகவதியார், தம் தம்பியாரை சைவ மதத்திற்கு மாற்றும்படி சிவபெருமானை வேண்டினார்.

சிவபெருமான் தருமசேனருக்கு வயிற்றில் சூலை நோயை கொடுத்தார். அந்நோயைத் தீர்க்க, சமணர்கள் அரும்பாடு பட்டும் குணமாகவில்லை. இதனால் சகோதரி இருந்த ஊருக்கு வந்தார் தருமசேனர். திலகவதியாரின் திருவதிகை மடத்தை வந்தடைந்தார். திலகவதியார் தம்பி தருமசேனருக்குத் தீட்சை அளித்தார். இருவரும் வீரட்டானேசுவரர் ஆலயம் சென்று வணங்கினார். அங்கு தருமசேனர், 'கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என்ற திருப்பதிகத்தைப் பாட, அவரது சூலை நோய் விலகியது. எம்பெயரில் தீம் பதிகம் பாடியதால் இனி, 'நாவுக்கரசு' என்று அழைக்கப் பெறுவாய் என்ற அசரீரியும் ஒலித்தது.

திருநாவுக்கரசர் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். தனக்கு விருப்பமான ஒன்றை, தங்கள் உடலில் பச்சைக் குத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். திருப்பெண்ணாகடத்திலுள்ள திருத்தூங்கானை மாடம் சென்று அங்குள்ள இறைவரிடம், "அடியேன் உடல் சமணத் தொடர்புடையது. இவ்வுடலோடு நான் உயிர் வாழ மாட்டேன். என் உடலில் சூலம் மற்றும் இடப முத்திரை பொறித்து அருள வேண்டும்!" என்று வேண்டி பதிகம் ஒன்றைப் பாடினார். சிவனருளால் சிவகணம் ஒன்று தோன்றி, நாவரசரின் தோளில் சிவ முத்திரைகளைப் பொறித்தது என பெரியபுராணம் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில். தேவகன்னியர், காமதேனு, ஐராவதம், இந்திரன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், நான்கு திசைகளிலும் இறைவனைத் தரிசிக்கும் வசதி அமைந்த ஆலயம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்.

ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து உயிர்களையும் உடைமைகளையும் அழித்து வந்தது. ஆனால், வெள்ளாற்றிற்கும், தென்பெண்ணை ஆற்றிற்கும் இடைப்பட்ட நடுநாட்டில் மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதற்கு, அங்குள்ள இறைவனே காரணம் என்பதை தேவர்களும், முனிவர்களும் உணர்ந்தனர். அத்தல இறைவனிடம் மக்களைக் காத்தருள வேண்டி நின்றனர். அதற்குச் செவிசாய்த்த இறைவன், பிரளயத்தை தடுக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். நந்திதேவர் ஊழி வெள்ளத்தைத் தன் வாயால் உறிஞ்சி, உலகைக் காத்தருளினார். எனவே இத்தல இறைவன் 'பிரளயகாலேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ஆலயத்தை சுற்றிலும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளம் தோண்டியபோது, அப்பர் பெருமான் சிலை கண்டெடுக்கப்பட்டது. இரண்டரை அடி உயரத்தில் கையெடுத்து கும்பிட்டது போல காணப்படும் அப்பர் பெருமானை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

*தல வரலாறு:

பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும் கலிக்கம்ப நாயனார் பேறு பெற்றதும் இத்தலத்தில் எனப்படுகிறது. தேவ கன்னியரும், காமதேனுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலமென்பதும் அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

தேவகன்னியரும்(பெண்)+காமதேனுப் பசுவும்(ஆ)+வெள்ளை யானையும்(கடம்) வழிபட்டதால் இத்தலத்திற்கு பெண்+ஆ+கடம் = பெண்ணாகடம் என்று பெயர் வந்தது.

இக்கோயிலின் மூலவர் இருக்கும் கருவறை தூங்கானை மாடம் (வடமொழில் கஜபிருஷடம்) வடிவில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் தமது திருமேனியில் திரிசூலக் குறியும் இடப முத்திரையும் பெற்ற தலமிது. இத்தலத்து மூலவரை முன் வாயில் மூலம் மட்டுமல்லாமல் மற்ற மூன்று புறத்திலிருந்தும் பக்தர்கள் வணங்குவதற்காக பலகணிகள் உள்ளன.

#ஆலய அமைப்பு : 

இவ்வாலயம் கிழக்கு நோக்கி எளிய நுழைவு வாசலைக் கொண்டுள்ளது. உள்ளே நுழைந்ததும், குடைவரை விநாயகர் அமந்துள்ளார். இதன்பின் கிழக்கு நோக்கிய அபூர்வ நந்தி, ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இடதுபுறம் அன்னை அழகிய காதலி சன்னிதி தனிக் கோவிலாக விளங்குகிறது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், சுவாமியை நோக்கியபடி கலிக்கம்பர், மெய்கண்டார் சன்னிதிகள் உள்ளன. அருகே நடராஜர் சன்னிதியும் காணப்படுகிறது. எதிர் திசையில் பலிபீடம், கொடிமரம், கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்திதேவர் காட்சிதர, பிரளயகாலேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. இவர் எண்பட்டை வடிவில் சதுர வடிவ ஆவுடையாரில், பிரம்மாண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்.

கருவறைச் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிட்சாடனர், சண்டேஸ்வரர், துர்க்கை ஆகியோர் திருமேனி காணப்படுகிறது. இது தவிர, தனி துர்க்கையம்மன் சன்னிதியும் கூடுதலாக அமைந்துள்ளது. ஆலய பிரகாரத்தில் கோடி விநாயகர், நால்வர், சந்தனக் குரவர்களான மெய்கண்டார், மறைஞானசம்பந்தர் மற்றும் கலிக்கம்பர், சேக்கிழார், தண்டபாணி ஆகியோர் திருவுருவங்கள் அமைந்துள்ளன. உற்சவமூர்த்தி மண்டபம், சப்தகன்னியர், நாகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி சன்னிதிகளும், நடராஜர் சபைக்குப் பின்புறம், பைரவர் மற்றும் சூரியபகவான் சன்னிதிகளும் உள்ளன.

#பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலிகட்டுமலைக்கோவில் :

 சுவாமியின் கருவறை ஒட்டி 30 மீட்டர் உயரத்தில் சவுந்தரேஸ்வரர் வாழும் மலைக்கோவில், ஏறவும், இறங்கவும் படிக்கட்டுகள் கொண்டு அமைந்துள்ளது. இதனை ‘கட்டுமலைக் கோவில்’ என்று அழைக்கின்றனர். இவ்வாலயம், சவுந்திரவல்லி என்ற அடியாரால் எழுப்பப்பட்ட ஆலயம் என்றும், அவரின் விருப்பத்திற்காகக் காட்சி தரும் விதமாக உயரத்தில் இருந்து இறைவன் அருளினார் என்றும் கூறப்படுகின்றது.அழகிய காதலி : சண்டிகேஸ்வரர் சன்னிதியின் எதிரே வடக்குப் பிரகாரத்தில் எளிய நுழைவு வாசல் மூலம் அழகிய காதலி அம்மன் ஆலயத்தை அடையலாம். பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம் இதனைக் கடந்ததும் துவாரபாலகிகள் இருவர் காட்சி தர, கருவறையின் உள்ளே எழிலான கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள். ஆமோதனம்பாள், கடந்தை நாயகி என்ற வேறு பெயர்களும் அன்னைக்கு உள்ளன.

ஆலயத்தின் தல மரம் தலமரம் செண்பக மரமாகும். தலத் தீர்த்தம் தெற்கே ஓடும் வெள்ளாறு ஆகும். இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.கலிக்கம்பர் : அறுபத்துமூவரில் ஒருவரான கலிக்கம்பர் அவதரித்த தலம் இது. வணிகர் குலத்தில் தோன்றிய இவர், தன் இல்லம் நாடி வருபவர் சிவனடியார்களுக்கு பாதபூஜை, அன்னம் பாலிப்பு செய்து வழிபடுவது வழக்கம். ஒரு சமயம் அவ்வாறு வந்த சிவனடியார்களில், தன் வீட்டில் பணி புரிந்தவரும் இருந்ததால், அவரின் பாதத்திற்கு நீர்வார்க்கத் தயங்கினார், கலிக்கம்பர் மனைவி. சிவனடியார் என்பதையே சிந்தையில் கொண்ட கலிக்கம்பர், இதனால் கோபம் கொண்டு மனைவியின் கையைத் துண்டித்தார். கலிகம்பரின் தீவிர பக்தியை மெச்சிய ஈசன், அவரது மனைவிக்கு இழந்த கையை மீண்டும் வழங்கி இருவருக்கும் கயிலைப்பேறு தந்தருளினார். இவர் வாழ்ந்த இடத்தில் தனிக்கோவில் ஒன்று ஆலயத்தின் அருகே கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது.

சந்தானக்குரவர்கள் சந்தானக் குரவர்கள் நால்வரில் இருவர் சிதம்பரத்திலும், மற்ற இருவர் பெண்ணடாகத்திலும் தோன்றியவர்களாவர். மெய்கண்ட நாயனார், மறைஞான சம்பந்தர் இருவரும் இத்தலத்தில் அவதரித்த அருளாளர்கள். மெய்கண்டாருக்கான திருவாவடுதுறை ஆதின ஆலயம், அச்சுத களப்பாளர் மேடு என்ற அவதார இடத்திலும், மறைஞானசம்பந்தர் மடம் பெண்ணாடகத்தில் உள்ள காமராஜர் தெருவிலும் அமைந்துள்ளன. அப்பரின் தோளில் இலச்சினை : தனக்கு விருப்பமான ஒன்றை, தங்கள் உடலில் பச்சைக் குத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். சமண மதத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய இவர், ‘சமணருடன் வாழ்ந்த இவ்வுடலோடு நான் எப்படி உயிர் வாழ்வேன். இவ்வுடலை நான் ஏற்கும் பொருட்டு என் தோள்களில் உமது இலச்சினையை பொறித்தருள வேண்டும்’ என்று இத்தல இறைவனிடம் வேண்டி நின்றார். அதற்கு இசைந்த இறைவன், இவரின் தோள்களில் சூலம், இடபம் ஆகிய குறிகளைப் பொறித்தார் என பெரியபுராணம் குறிப்பிட்டுள்ளது. அமைவிடம் : கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் பெண்ணாடம் அமைந்துள்ளது. விருத்தாசலம்- திருச்சி நெடுஞ்சாலையில் மேற்கே 17 கி.மீ தொலைவில் வெள்ளாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.

பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு 
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற்கு இச்சையுண்டேல் இருங் கூற்றகல
மின்னாரு #மூவிலைச்_சூலமென்_மேல்_பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை 
மாடச்சுடர்க்கொழுந்தே- எம்பிரான் அப்பர் பெருமான் - 4.109.1.   
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...