Friday, September 13, 2024

குங்கிலியக்கலய நாயனார்ஆவணி மூலம் திருக்கடவூர்....


குங்கிலியக்கலய நாயனார்
ஆவணி மூலம்
#அவதாரத்_தலம்:
திருக்கடவூர்
#முக்தித்_தலம்:
திருக்கடவூர்

காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் என்ற ஒரு தலம் உண்டு. அது இறைவன் வீரஞ் செய்த எட்டுத் தலங்களில் ஒன்றாதலின் கடவூர் வீரட்டானம் என்று பெயர் பெறும். காலனை உதைத்த வீரம் இங்கு நிகழ்ந்துள்ளது. இத்தலத்தில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள். அவர்களுள் கலயனார் என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடி பேணும் சிறந்த அன்புடையவர். நல்லொழுக்கத்திற் சிறந்தவர். அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி குங்கிலிய தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர்.
அந்நாளிலே திருவருளாலே அவருக்கு வறுமை வந்தது. அதன் பின்னரும் அத்திருப்பணியை வழுவாது செய்து வந்தனர். வறுமை மிகவே தமது நல்லநிலம முழுவதையும், அடிமைகளையும் விற்றுப் பணிசெய்தனர். வறுமை மேலும் முடுகியதனால் தாமும், மனைவி, மக்களும் சுற்றமும் உணர்வுக்கான பொருள் ஒன்றும் இன்றி இரண்டு நாள் உணவின்றி வருந்தினார்கள். இதுகண்ட மனைவியார் கணவனார் கையிற் குற்றமற்ற மங்கல நாணில் அணிந்த தாலியை எடுத்துக் கொடுத்து "இதற் நெல்கொள்ளும்" என்றனர். அதனைக் கொண்டு அவர் நெல்கொள்ளச் சென்றபோது எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லாத குங்கிலியப் பொதிகொண்டு வந்தான். அதனை அறிந்த கலயனார் "இறைவனுக்கேற்ற மணமுடைய குங்கிலியம் இதுவாயின் இன்று நல்ல பேறுபெற்றேன். பெறுதற்கரிய இப்பேறு கிட்ட வேறுகொள்ளத்தக்கது என்ன உள்ளது? என்று துணிந்து பொன் பெற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியினைத் தருமாறு வணிகனைக் கேட்டார். அவனும் மகிழ்ந்து அவர் தந்த தாலியைப் ஏற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியை கொடுத்துச் சென்றான். கலயனார் சிந்தை மகிழ்வுடன் விரைந்து சென்று கோயிற் களஞ்சியத்தில் அப்பொதியின் குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார்.

அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால் மிகவருந்தி அயர்ந்து தூங்கினர். அப்போது இறைவனுடைய திருவருளினாலே குபேரன் தனது செல்வத்தைப் பூமியில் கொண்டுவந்து நிறைத்து கலயனாரது மனை முழுவதும் பொற்குவியலும் நெற்குவியலும் அரிசி முதலிய பிற எல்லா வளங்களுமாக ஆக்கி வைத்தனன். இதனை இறைவன் அம்மையாருக்குக் கனவில் உணர்த்த, அவர் உணர்ந்து எழுந்து செல்வங்களைப் பார்த்தனர்; அவற்றை இறைவரின் அருள் என்று கண்டு கைகூப்பித் தொழுதனர்; தனது கணவனாரிற்குக் திருவமுது சமைக்கலாயினார். திருக்கோயிலில் இருந்த கலயனார்க்கு "நீ பசித்தனை! உன் மனையிற் சென்று பாலின் இன் அடிசில் உண்டு துன்பம் நீங்குக" என்று இறைவர் கட்டளை இட்டு அருளினார். அத்திருவருளை மறுப்பதற்கு அஞ்சிக் கலயனார் மனையில் வந்தனர். செல்வமெல்லாங் கண்டனர்; திருமனையாரை நோக்கி "இவ்விளை வெல்லாம் எப்படி விளைந்தன?" என்று கேட்க, அவர் "திருநீலகண்டராகிய எம்பெருமானது அருள்" என்றார். கலயனார் கைகூப்பி வணங்கி "என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான் திருவருள் இருந்தபடி இதுவோ? என்று துதித்தனர். மனைவியார் பரிகலந்திருத்திக் கணவனாரைச் சிவன் அடியார்களோடு இருத்தித் தூபதீபம் ஏந்திப் பூசித்து இன்னமுதூட்டினார். அது நுகர்ந்த கலயனார் இன்பமுற்றிருந்தார். இவ்வாறு இறைவரருளால் உலகில் நிறைந்த செல்வமுடையவராகி அடியவர்களுக்கெல்லாம் நல்ல இனிய அமுதூட்டியும் உதவியும் வாழ்ந்திருந்தன.

இந்நாளில் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, தாடகை என்ற அரச மாதுக்கு அருளும் பொருட்டு சாய்ந்தது. சாய்ந்தவாறே இருந்தது. அதனைச் சாய்வுபோக்கி கண்டு கும்பிட வேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிரப்பண்ண முயன்றனன். இறைவர் நேர் நிற்கவில்லை. யானைகளும் இளைத்து வீழ்ந்தன. அரசன் மிகவும் கவலையோடிருந்தான். இதனைக் கேள்வியுற்ற குங்கிலியக்கலய நாயனார், நாதனைக் நேர்காணும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரின்றும் சென்று திருப்பனந்தாளிற் சேர்ந்தனர். சேனைகள் இளைத்து வீழ்ந்து எழமாட்டா நிலைகண்டு மனம் வருந்தினார்.

 இவ்விளைப்பிலே நானும் பங்குகொண்டு இளைபுறவேண்டும் என்று துணிந்தார். இறைவரது திருமேனிப் பூங்கச்சிற்கட்டிய பெரிய வலிய கயிற்றினை தம் கழுத்திற் பூட்டி இழுத்து வருந்தலுற்றார். இவர் இவ்வாறு செய்து இளைத்த பின் இறைவர் சரிந்து நிற்க ஒண்ணுமோ? இவர் தமது அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்டபோது அண்ணலார் நேரே நின்றார். தேவர்கள் விண்ணில் ஆரவாரித்துப் பூமழை பெய்தனர். வாடியசோலை தலைமழை பெய்து தழைப்பது போல யானை சேனைகள் களித்தன. சோழ மன்னன் கலயனாரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி மேருவை வில்லாக வளைத்துப் புரமெரித்த கடவுளின் செந்நிலை காணச் செய்தீர்! திருமாலுங் காணாத மலரடியிணைகளை அன்புடைய அடியாரே அல்லலால் நேர்காண வல்லார் யார்? என்று துதித்தான். பின்னர் அரசன் இறைவர்க்குப் பிறபணிகள் பலவும் செய்து தனது நகரத்திற்குச் சென்றான். அரசன் சென்ற பின்னரும் கலயனார் சிலநாள் இறைவனை பிரிய ஆற்றாது அங்கு தங்கி வழிபட்டுப் பின் திருக்கடவூர் சேர்ந்தனர்.

திருக்கடவூரிலே தூபத்திருப்பணி செய்திருக்கும் நாளில் ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் அத்திருத்தலத்திற்கு எழுந்தருளினார்கள். மிக்கமகிழ்ச்சி பொங்கக் கலயனார் அவர்களை எதிர்கொண்டு அழைத்து வந்தார். தமது திருமனையில் அவர்களது பெருமைக்கேற்றவாறு இன்னமுது அளித்து வழிபட்டார். அதனால் அவர்களது அருளே அன்றி இறைவரது அருளும் பெற்றார். இவ்வாறு கலயனார் அரசனுக்கும், அடியவர்களுக்கும் ஏற்றனவாய்த் தமக்கு நேர்ந்த பணிகள் பலவும் செய்து வாழ்ந்திருந்து சிவபெருமானது திருவடி நிழலிற் சேர்ந்தார்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...