சங்கடங்களைப் போக்கிடும் சரபர் தரிசனம்.!
சிவபெருமானது சங்கார (சம்ஹார) மூர்த்தங்களுள் மிகச்சிறப்பானதாகப் போற்றப் பெறுபவர் சரப மூர்த்தி.
#சரபேஸ்வரர், #சிம்மக்னமூர்த்தி, #சாளுவேஸ்வரமூர்த்தி என்ற பெயர்களால் குறிப்பிடப்படுவர் இந்த சரபமூர்த்தியே.
சரபம் எனப்பெறுவது 'பறவை, மிருகம், மனிதம்' மூன்று உருவ அமைப்புகளைக் கலந்த மிஸ்ரத் தோற்றம். சிங்கத்தினை விட பலம் வாய்ந்ததாக புராணங்களில் சொல்லப்படுவது.
'#எண்காற்புள்' என்றும் '#சிம்புள்' என்றும் தமிழ்பக்தி இலக்கியங்களில் குறிப்பிடப் படுகிறது இது. இத்தகு தோற்றதுதுடன் வடிவெடுத்த பைரவமூர்த்திக்கு சரபமூர்த்தி என்பது திருநாமம்.
பொன்னிறமான உடலும்; செந்நிறத்தில் கண்களும்; மேல் நோக்கிய இரு இறகுகளும்; நாற்கால்களும்; கூரிய வளைந்த நகங்களுடன் கூடிய மேனோக்கிய பாதங்களும்; சிங்க முகமும்; சிரசில் க்ரீடமும்; அச்சமூட்டும் கோரைப்பற்களும்; மிக நீண்ட வாலும்; முடிந்த சடையும்; போர்க்குணமும் உடையவராக சரப மூர்த்தி சித்தரிக்கப்படுகின்றார்.தனதிரு கரங்களினால் அஞ்சலி பாவனையில் உள்ள நரசிம்மத்தினைப் பற்றிக் கொண்டிருப்பது போல இவரது தோற்றமானது புராணநூல்களில் விவரிக்கப்படுகின்றது.
எட்டு கால்கள் உடையவராகவும்; 32 கால்கள் உடையவராகவும் சரபரைக் குறித்த புராணச் சித்தரிப்புகளும் உண்டு.
அளவிட இயலாத பெரும் சக்தி கொண்ட இந்த விசித்திரத் தோற்றத்தின் இரண்டு இறக்கைகளிலும் சூலினி துர்க்கா மற்றும் ப்ரத்யங்கிரா ஆகிய உக்கிரஹ சக்திகள் விளங்குகின்றார்கள்.
ஹிரண்யாசுரனை வதம் செய்யும் பொருட்டு, நரசிம்ஹ அவதாரம் செய்த திருமால் அந்த கடும் உக்கிரகம் தணியாமல் ஆவேசித்துத் திரிந்தாராம். அக்கடுமை தாங்காமல் மூவுலக ஜீவர்களும் பயத்தால் நடுங்கியது கண்டு பரிந்த சிவபெருமான் சாளுவ பக்ஷியாக (சரபப் பறவை) உருவெடுத்து தன்னிரு இறக்கைகளால் அணைத்து நரசிம்ஹரைச் சாந்தப்படுத்தியதாக வரலாறு.
லிங்க புராணத்திலும்; சரப புராணத்திலும்; காஞ்சி புராணத்திலும் சிவ பராக்கிரமம் எனும் நூலிலும் சரப அவதாரம் குறித்த கதைகள் இடம் பெற்றுள்ளன.
64 சிவத்திருக்கோலங்களுள் ஒன்றான இந்த சாளுவேஸ்வர மூர்த்தத்தினை
'#ஆகாசபைரவர்' எனவும் குறிப்பிடுகின்றார்கள்.
வணங்கிடுபவர்களுக்கு சிவபெருமான், #நரசிம்ஹர், #சூலினிதுர்க்கா, #ப்ரத்தியங்கிரா ஆகிய நான்கு தெய்வங்களின் அனுக்ரமும் ஒருசேரக் கிடைத்திடும் அற்புதமான ஸ்வரூபம் இந்த சரப மூர்த்தம்.
பரிகாரமே இல்லை எனச்சொல்லப் பெறும் துன்பங்களுக்குக் கூட, சரபேஸ்வரரை வழிபட நிவாரணம் கிடைத்திடும் என்பது கண்கூடு.
விஷபயங்கள்; தீய அதிர்வுகளினால் உண்டாகும் பாதிப்புகள்; நரம்பு வியாதிகள்; மூளைக்கோளாறுகள்; வாய் பிதற்றல்; தேவையற்ற பயம்; மன பீதி; வயது மூப்பு மற்றும் இவற்றினால் உண்டாகும் உடல் தளர்வு அல்லது நடுக்கம் ; எதிர்மறை எண்ணங்கள்; ஏவல் ஆகிய பிரச்சினைகளைப் போக்கிடும் கண்கண்ட தெய்வம் இந்த சரபேஸ்வரர்.
தொடர்ந்து 11 ஞாயிற்றுக் கிழமைகள் சரபேஸ்வரர் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவோர்களுக்கு கடுமையான பிரச்சினைகளும் அகன்று நற்பலன்கள் கிடைத்திடுவது இன்றளவும் கண்கூடு.
மூன்றாம் குலோத்துங்க சோழமன்னன்
(கி.பி. 1178 - 1218) தாம் கட்டிய சிவாலயங்களில் எல்லாம் இந்த சரபமூர்த்தியைப் ப்ரதிக்ஷ்டை செய்வித்தாக வரலாறு. இச் சோழ மன்னனால் கட்டப்பெற்ற திருப்புவனம் (திரிபுவனம்) கம்பஹரேஸ்வரர் கோயிலில் சரபமூர்த்திக்கு தனித்த சந்நிதி அமைக்கப் பெற்றுள்ளது.
இது தொன்மையான ஆதிசரபேஸ்வரர் திருக்கோலமாகப் போற்றப்பெறுகின்றது.
திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரம் ஆதீனம் -ன் பரிபாலனத்தில் விளங்கிடும் இவ்வாலயத்தில் பங்குனி உத்திரப் பெருவிழாவினைப் பூர்த்தி செய்தவுடன் அடுத்தமையும் ஞாயிறு தினத்தில் ஏகதின லட்சார்ச்சனை செய்து 'சரபர் உற்சவம்' நிகழ்த்துவது தொன்வழமை.
அவ்வகையில் நேற்றைய தினத்தில் (20.04.2025) சரபர் உற்சவமானது திருத் தருமையாதீனகர்த்தர் திருமுன்னர் மிகச்சிறப்பாக நிகழ்த்தப்பெற்றுள்ளது.
பிரகலாதன், வரகுண பாண்டியன் முதலானோர் நடுக்கத்தினை அகற்றியருளிய திருப்புவனத்து சரபமூர்த்தியை வழிபட்டு அவரது அருளைப் பெற முயல்வோமே..!
-Sujatha Mali.
குருவே சரணம்
"பக்திச் சிங்கவணை மீது படரின்றிருந்த பார்த்திவனை
எத்திச் சிங்கலறக் கொன்ற இறுமாப்பதனால் இரு நிலத்திற்
றத்திச் சிங்கலறத் தேய்த்தறன்னைக் கண்டு சரபதமாய்க்
கொத்தி சிங்கன்தனை யழித்த கோவே நினது சரண் போற்றி".
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment